"ஓபிஎஸ்க்கு முதன்முதலில் மாநில பதவி கொடுத்ததே நான்தான்.. அப்புறம்தான் ஜெயலலிதா”- ஆர்எஸ்.பாரதி பேச்சு
தேனி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதன்முதலில் மாநில அளவில் பதவி வழங்கியது நான் தான் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆருக்கும் முதன் முதலில் 1967 தேர்தலில் டெபாசிட் செலுத்தியதும் நான் தான் என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை எதிர்க்க அண்ணாமலை யார்? திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கருணாநிதியின் பெயரை வைக்கலாம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு
தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதன்முதலில் மாநில அளவில் பதவி வழங்கியது நான் தான். அதன் பிறகே ஜெயலலிதா முதல்வராக்கினார் எனப் பேசியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 1996 முதல் தமிழ்நாடு நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக இருந்தேன். தமிழ்நாடு நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக ஓ.பி.எஸ்-க்கு முதன் முதலில் மாநில அளவில் அரசியலில் பதவி வழங்கியது நான் தான்.
அதற்குப் பிறகு தான் 2002-ல் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.எஸ்-ஸை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கு முன் தேர்ந்தெடுத்த எனக்கு அவர் நன்றி கூற வேண்டும்.

எம்.ஜி.ஆர்
அதேபோல முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் முதன் முதலில் 1967 தேர்தலில் டெபாசிட் செலுத்தியதும் நான் தான். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் மூன்று முறை முதலமைச்சரானார். எனவே என்னுடைய கை ராசியான கை.
இன்றைய அ.தி.மு.கவில் இருப்பவர்கள் யாரும் எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. ஜெயலலிதாவை மட்டும் பார்த்திருப்பார்கள். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்த போது அவருடன் நான் சென்றிருந்தால் எனக்கும் பெரிய அளவில் பதவி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் நான் செல்லவில்லை. கடைசி வரை ஒரே கட்சி தி.மு.கவிலேயே இருந்துவிட்டேன் எனப் பேசினார்.

அண்ணாமலை
மேலும், திருவாரூர் சர்ச்சை குறித்துப் பேசிய அவர், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதை எதிர்க்க அண்ணாமலை யார்? திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கருணாநிதியின் பெயரை வைக்கலாம்.
அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, முருகன் அல்ல.. மோடியே வந்தாலும் அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. இங்கு தி.மு.க, அ.தி.மு.க என எங்களுக்குள் எப்போதும் சண்டை இருக்கும். அதை வைத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications