அது என்ன காதல் கடிதமா? வாங்க முடியாதென திருப்பி அனுப்புவதற்கு.. எடப்பாடியை அட்டாக் செய்த புகழேந்தி!
தேனி: தேர்தல் ஆணையம் சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பபட்ட கடிதத்தை ஏற்காமல் அதிமுக தலைமை திரும்பி அனுப்பியது. இதுகுறித்து பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கு, அது ஒன்றும் காதல் கடிதம் அல்ல என்று விமர்சித்துள்ளார்.
ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்குவதற்கு அழைப்பு விடுத்து அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த வகையில் தமிழகத் தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு தனித்தனி கடிதம் அனுப்பினாா்.
அந்தக் கடிதத்தை ஓபிஎஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்தின் அலுவலகத்திலேயே பெற்றனா். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றது. இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஏற்கவில்லை. அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளா் என்ற ஒரு பதவி இல்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தைத் தமிழகத் தோ்தல் அதிகாரிக்கே அதிமுக தலைமை திருப்பி அனுப்பியது.
எடப்பாடி போட்ட சீக்ரெட் 'டீல்’.. சுற்றி வளைச்சிட்டாங்க.. “சரணாகதி”.. பகீர் கிளப்பிய புகழேந்தி!
தேர்தல் ஆணையம் விளக்கம்
இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே கடிதம் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி மற்றும் கரூர் மாவட்ட செயலாளர்களை சந்தித்தனர்.
அது என்ன காதல் கடிதமா?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புகழேந்தி கூறுகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு என்று கேள்வி எழுப்பினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார்.
தம்பிதுரையின் தூண்டுதல்
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்கின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அனுப்பியது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் காரணமாக தான் என்று தெரிவித்தார்.
சசிகலா காலில் யார் விழவில்லை?
தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள் என்று விமர்சித்தார். பின்னர் சசிகலா பற்றிய கேள்விக்கு, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது, அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா. அவரது காலில் விழந்ததால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முடிந்தது. சசிகலாவை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு தகுதி கிடையாது என்று தெரிவித்தார்.
பொங்கல் பரிசு
பின்னர், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என முதலில் அரசுக்கு கோரிக்கை விடுத்தது ஓ.பன்னீர்செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்ததால் தான் ஸ்டாலின் செயல்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல. எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு இது வரை முதலமைச்சர் எவ்வித செவியும் சாய்க்கவில்லை. தற்போது கூட எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வம் விருப்பமாகும் என தெரிவித்தார்.