'கிண்டல்'.. பள்ளியில் மாணவனை சுத்தியலால் அடித்து கொன்ற சக மாணவன்.. அரண்டு போன தேனி!
தேனி: தேனி அருகே கண்டமனூரில் 12ம் வகுப்பு மாணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த சக மாணவனை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி கேலி கிண்டல் செய்த பள்ளியிலேயே, இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார் சக மாணவன்.
Recommended Video
பள்ளிகளில் சாதாரணமாக நடைபெறும் கேலி கிண்டல் பேச்சுகள் விபரீதமாகுவது உண்டு. சண்டையில் முடியும். சில நேரங்களில் மரணத்தில் கூட போய் முடியும். அப்படித்தான் தேனி கண்டமனூரில் சக மாணவனைஅடித்துக் கொன்றுள்ளார் மாணவர்.
தேனி மாவட்டம், கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன் (வயது17). இவர் கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தனசேகரன் அவருடைய சக வகுப்பு மாணவனான கண்டமனூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சீமான் (வயது19) என்பவரை அடிக்கடி கேலி செய்தாரார்.
ஒருவரை ஒருவர் தாக்கினர்
இதனால் தனசேகரனுக்கும், சீமானுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனசேகரன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் வைத்து சீமானை கேலி செய்துள்ளான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.
சுத்தியலால் தாக்கினான்
அப்போது சீமான் கையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து தனசேகரன் கை, தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கினான். இதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
மருத்துவனையில் பலி
இதனையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனசேகரன், இன்று பரிதாபமாக இறந்தார்.
உறவினர்கள் மறியல்
இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சீமானை கைது செய்தனர். இந்நிலையில் இறந்த தனசேகரனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு கண்டமனூருக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது தனசேகரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டமனூர்-தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமாதானாம்
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த தனசேகரனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து 3 மணிநேரமாக நீடித்த மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.