எரிந்து கிடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்.. சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.. கொதித்து எழுந்த எடப்பாடி
நெல்லை: ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இன்று உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஒரு வாரத்துக்கு முன்பே வந்த மிரட்டல்? 'மரண வாக்குமூலம்’ என கடிதம் எழுதிய ஜெயக்குமார்.. திடுக் தகவல்
இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.
தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச் செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications