சரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்
நெல்லை: நாங்குநேரி தொகுதி அதிமுக தலைமை தேர்தல் பணிமனை காற்றில் சரிந்து விழுந்தது அதிமுக நிர்வாகிகளை கவலையடையச் செய்துள்ளது.
நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்கும்,தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்கும் அதிமுக சார்பில் பிரமாண்ட தேர்தல் அலுவலகம் போடப்பட்டிருந்தது. ஹாஸ்பிட்டாஸ் சீட்களால் சுமார் 200 அடி நீளத்திற்கும், 100 அடி அகலத்திற்கும் அதிமுக தலைமை தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டிருந்தது.

நாங்குநேரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அங்கு நிகழ்ந்த நிகழ்வு அதிமுகவினரை சற்று அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் சூறைக்காற்றில் சரிந்து விழுந்ததை நிர்வாகிகள் நல்ல சகுனமாக கருதவில்லை. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
பொதுவாக வீடுகளில் திருமணம் வைத்திருந்தால் அதற்காக போடப்படும் பந்தல் திருமணம் நடைபெறும் நாளுக்கு முன்னர் காற்றில் சரிந்து விழுந்தாலோ, தீ பற்றி எரிந்தாலோ அதை அபசகுணமாக கருதி சிலர் சிறப்பு பூஜைகளை நடத்துவது வழக்கம். ஒரு சிலர் திருமணத்தையே தள்ளிபோடும் பிற்போக்கு நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.
இதனிடையே காற்று, மழை காரணமாக இது போன்று நடப்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான், இதனை தாங்கள் அபசகுணமாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறுகிறார் நாங்குநேரியில் கடந்த ஒரு மாதமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகி ஒருவர். மேலும், தங்கள் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications