கல்குவாரி விபத்து: விதிமீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி
நெல்லை: கல்குவாரியில் விதிமீறல் ஏற்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது.
Recommended Video

இங்கு சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரியில் நேற்று இரவு வழக்கம் போல் கற்களை அள்ளும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்றன.
அதன்படி லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 6 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென 300 அடி உயரத்திலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால் அனைவரும் கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்து தொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், கல்குவாரி விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்டுள்ளோம். அதில் ஒருவர் இறந்துவிட்டார்.
காயமடைந்த இருவருக்கும் முதல்வர் உத்தரவுப்படி தலா ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குவாரியில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.
குவாரி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குவாரியில் விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் விஷ்ணு, எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications