டிஜிபி சைலேந்திர பாபு பேசுவதாக ஒரு போன்.. 7.5 லட்சம் பறிகொடுத்த போலீஸ் உயர் அதிகாரி! அதிர்ந்த நெல்லை
திருநெல்வேலி: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பேசுவதாக கூறி, நெல்லை மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரியிடம் மர்ம நபர்கள் ஆன்லைன் மூலமாக 7.5 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு 12ஆவது சிறப்பு பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பேசுவதாக கூறியதோடு, அமேசான் பரிசு கூப்பன் உங்களுக்கு அனுப்பி இருப்பதாகவும், அதனை வாங்கிக்கொள்ளுமாறும் பேசியுள்ளார்.
இதனையடுத்து, அந்த போன் நம்பரில் வாட்ஸ்-அப் புகைப்படத்தை பார்த்தபோது அதில் டிஜிபியின் படம் இடம்பெற்றிருந்தது. இதனால் டிஜிபிதான் தனக்கு போன் செய்துள்ளார் என நம்பிய கார்த்திகேயன், ஆன்லைனில் பணம் செலுத்தி, பரிசு கூப்பனை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர்தான் அந்த கூப்பன் போலி என்றும், ஆன்லைன் மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதையும் கார்த்திகேயன் உணர்ந்தார்.
ரூ.7.5 லட்சம் வரை ஆன்லைனில் பறிகொடுத்ததால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், உடனடியாக இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பரிசு கூப்பன் மூலம் ஏமாற்றிய நபா் நைஜீரியா நாட்டை சோந்தவா் என தெரியவந்தது. காவல்துறை அதிகாரி கார்த்திகேயனை போல், தமிழ்நாடு முழுவதும் 7 அதிகாரிகள் இந்த கும்பலால் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், வனத்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடமும் இந்த மோசடி கும்பல், கைவரிசை காட்டியிருப்பது அம்பலமாகியது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ அனுப்பி, ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறியவதாவது: ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க ஆன்லைன் மோசடி செய்திகளை புறக்கணிக்க வேண்டும். டிஜிபியின் அமேசான் பரிசு கூப்பன் என்ற போலி குறுஞ்செய்தி வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படுகிறது. காவல்துறை சார்பில் அதுபோன்று எந்த தகவலும் அனுப்பப்படவில்லை. பொதுமக்களில் யாருக்கேனும் இதுபோன்று போலியான செய்தி வந்தால் தமிழ்நாடு சைபர் கிரைம் இணையதளத்திலும், 1930 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
அண்மை காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து, பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது போலீஸ் உயர் அதிகாரியே இந்த மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.