திமுக நடவடிக்கை எடுக்காது.. ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை தருவார்கள்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
நெல்லை: இந்து மதம் பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, தமிழக பாஜகவின் அனைத்து தலைவர்களும் பேச்சு ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இதே வேலையாகப் போச்சு.. ’டெல்லி’ மூலம் ஆ.ராசா மீது ஆக்சன்! பரபரப்பை பற்ற வைத்த 'தாமரை’ தலைவர்!
நயினார் நாகேந்திரன் மனு
இந்த நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், சட்டமன்ற தொகுதி தொடர்பான கோரிக்கைகளை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மனுவாக அளித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆ.ராசா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆ.ராசாவுக்கு கண்டனம்
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசிய கருத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் ஆ. ராசா பேசிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி என்ற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம்.
மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ. ராசாவின் கருத்திற்கு சரியான தண்டனை கிடைக்கும். அவர் பேசிய கருத்தை எடுத்துரைத்து நாடாளுமன்றத்திலும் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில காவல்துறையை கையில் வைத்திருக்கும் திமுக, ஆ.ராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பொதுமக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பாரபட்சத்துடன் நடந்து வருகிறது. சமூக நீதி என்பது பெயரளவு தான் உள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் நடந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பாஜக இருக்கும் கூட்டணி தொடரும். தேர்தல் வரும் போது எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.