கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்க கடும் எதிர்ப்பு! அமைச்சர் துரைமுருகனுடன் மோதும் எஸ்.டி.பி.ஐ.!
நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுர தாலுக்காவில் 3 புதிய கல் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கனிமவளத்துறையை கையாளும் அமைச்சர் துரைமுருகனுடன் நேரடியாக மோத துணிந்துவிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி, கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்திருப்பதாவது;

3 புதிய கல்குவாரிகள்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள இருக்கன்துறையில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் உள்ள நிலையில் புதிதாக 3 புதிய கல்குவாரிகளை அமைப்பதற்கு ஹைடெக் ராக் புராடக்ட்ஸ் & அக்ரிகேட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. கூடன்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளின் தேவைக்காக இந்த குவாரிகளை அமைக்க விருப்பதாகவும், எஞ்சியவற்றை அருகில் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்குவதாகவும் கூறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

வழக்கம் போல் பொய்
வழக்கம்போல் வேலைவாய்ப்பு, மரங்கள் வளர்ப்பு, மேம்பாட்டுத்திட்டங்கள் என்கிற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த குவாரிகள் அமையவிருக்கும் இடம் அணு உலையிலிருந்து 5 கி.மீட்டர் சுற்றளவிற்குள்ளும், சுமார் 190 அடி ஆழத்திற்கும் அமைய உள்ளதால் அதனால் ஏற்படும் அதிர்வுகளால் அணு உலைகளுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

அபராதம் விதிப்பு
நெல்லை மாவட்டத்தில் தற்போது இயக்கத்தில் உள்ள 54 கல் குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று, அரசு அமைத்த ஆய்வு குழுக்கள் ஆதாரபூர்வமாக நேரில் கண்டறிந்து அறிவித்துள்ளது. அதில் 19 குவாரிகள் இயங்கவே தகுதி இல்லாதது என்றும், மற்ற குவாரிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இருக்கன்துறையில் புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க குஜராத் முதலாளிகளைக் கொண்ட தனியார் நிறுவனம் முயன்றுவருகின்றது.

கனிமவள கொள்ளை
கூடங்குளம் அணு உலை கட்டுமானப் பணி என்பதைத் தாண்டி இதன் பின்னணியில் மிகப்பெரும் கனிமவள கொள்ளை உள்ளதோ என்கிற ஐயம் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் அமையும் விழிஞ்சியம் துறைமுகத்துக்கு தேவையான கற்கள் அனைத்தும் தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்தே கொண்டு செல்லப்படுகின்றது. தற்போது இருக்கன்துறையில் திட்டமிடப்பட்டுள்ள குவாரியின் செயல்பாடும் அண்டை மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதே என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.












Click it and Unblock the Notifications