200 ஆண்டுகளாக பயன்படுத்திய இடுகாடு.. எனக்கே சொந்தம்.. உரிமை கொண்டாடும் நபர்
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழி கிராமத்தில் 200 ஆண்டுகள் சுடுகாடாக பயன்படுத்திய நிலத்துக்கு ஒருவர் சொந்தம் கொண்டாடுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பண்பொழி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்களை சார்ந்த 2800 பல்வேறு தரப்பு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் இறந்தவர்கள் உடலை தேன்பொத்தை -செங்கோட்டை சாலையில் உள்ள ஒரு இடத்தில் 200 ஆண்டு காலமாக அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி பெரிய பிள்ளை வலசை கிராமத்தைச் சார்ந்த நடராஜன் மற்றும் அவரது மகன் லட்சுமணன் ஆகியோர் அந்த நிலத்தை இடுகாட்டு பகுதியை இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தி அதிலிருந்த மண்மேடுகளை அப்புறப்படுத்திவிட்டு சமப்படுத்தியுள்ளனர்.
இதனைக் கண்ட இந்த பகுதி மக்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து இது எங்களது ஊர் சுடுகாடு இதை நீங்கள் ஏன் பராமரிப்பு செய்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு எதிர்ப்புத்தெரிவிக்கவே அவர் தனது நிலம் என்பதற்கான சான்றுகளையும்,பத்திர நகல்களை காட்டயுள்ளார்.
பொதுமக்கள் இந்த கிராமத்தில் நீங்கள் உங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தை 200 ஆண்டுகாலமாக எங்கள் முன்னோர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டை தாசில்தார் பொறுப்பு மரகதநாதன்,காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவர் உடலை இப்போது இந்த நிலத்தில் அடக்கம் செய்வதில் பிரச்சனை இல்லை. இடம் தனக்குரியது என நடராஜன் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு கட்டுபாட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று சமாதானம் பேசி இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.