"இருப்பதே 2 பல்புதான்.. இதுக்கு ரூ.91,000 மின் கட்டணமா!" அதிர்ந்து போன நெல்லை பெண்.. நடந்தது என்ன
திருநெல்வேலி: தமிழகத்தில் புதிய மின் கட்டணம் கடந்த மாதம் தான் அமலுக்கு வந்த நிலையில், ஆங்காங்கே மின் கட்டணம் மிக அதிகமாக வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த புதிய மின் கட்டண உயர்வு கடந்த மாதம் தான் அமலுக்கு வந்தது.
கடந்த 8 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்றும் தமிழக மின்வாரியத்திற்கு அதிகளவில் கடன் உள்ளதே இதற்கு காரணம் எனத் தமிழக அரசு கூறி இருந்தது.
சென்னையில் இன்றைய மின் தடை.. உங்க ஏரியா இருக்கா பாருங்க.. சட்டுபுட்டுனு சட்னி அரைங்க!
மின் கட்டணம்
மேலும், இந்த மின் கட்டண உயர்வால் 40% நுகர்வோருக்குப் பெரியளவில் மின் கட்டணம் உயராது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் நிலையிலும், அதன் பின் நாம் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவுக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 1,000 யூனிட்டுக்கு மேல் நாம் பயன்படுத்தும் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை
புதிய முறையில் இப்போது மின் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சில இடங்களில் அதிகப்படியான மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. அப்படித்தான் நெல்லையில் தனக்கு வந்த மின்சார பில்லை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து.
91,130 ரூபாய்
40 வயதான முகமது பாத்து, தனது தந்தை உதுமான் கனியுடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் குறித்து வந்த மெசேஜை பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. கடந்த இரு மாதத்திற்கு மின் கட்டணமாக 91,130 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என அதில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அதுவும் நவ.5க்குள் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இரண்டு பல்பு தான்
இதனால் மிரண்டு போன முகமது பாத்து உடனடியாக நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று இது குறித்துக் கேட்டு உள்ளார். "எப்போதும் மின் கட்டணம் 100 ரூபாய்க்குக் குறைவாகவே வரும்.. போன மாசம் கூட ரூபாய் 65 தான் மின் கட்டணம் செலுத்தினேன். இந்த மாசம் எப்படி இவ்வளவு அதிகமாக வந்து இருக்கிறது. அதுவும் என் வீட்டில் இருப்பதே இரண்டு ரூம் தான். எங்க இரண்டு பேருக்கு இருப்பதே இரண்டு பல்பு தான்.
வாய்ப்பே இல்லை
அப்படி இருக்கும் போது எப்படி ரூ 91 ஆயிரம் வந்துள்ளது. இந்தளவுக்கு மின் கட்டணம் வர வாய்ப்பே இல்லை. இவ்வளவு பெரிய தொகையை என்னால் எப்படி கட்ட முடியும்" எனப் புலம்பித் தீர்த்து இருக்கிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மிஸ்டேக் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறிய மின்வாரிய ஊழியர்கள், விரைவில் சரியான பில்லை அனுப்பி வைப்பதாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.
நடந்தது என்ன
வெறும் 2 ரூம் இருக்கும் வீட்டிற்கு ரூ 91 ஆயிரம் பில் வந்தது அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர்கள் கூறியதை போலவே இரு நாட்களில் புதிய மின்சார பில் வந்து உள்ளது. அதில் மின்சார கட்டணம் 122 ரூபாய் என்றே உள்ளது. இதைப் பார்த்த பின்னரே முகமது பாத்து அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு இருக்கிறார்.