நெல்லையில் நீடிக்கும் கனமழையால் தாமிரபரணியில் 61 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - சாலைகள் துண்டிப்பு
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 61,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர
திருநெல்வேலி: கனமழை நீடிப்பதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. ஐந்து அணைகளில் இருந்தும் விநாடிக்கு 61 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
திருநெல்வேலியில், பாபநாசம் அணையிலிருந்து 25,000 அடி கனநீரும், சேர்வலாறு அணையிலிருந்து, 7,616 கனஅடி நீரும், மணிமுத்தாறு அணையிலிருந்து 25,916 கனஅடி நீரும், கடனா அணையிலிருந்து 3,389 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
என்ட் கார்டு இல்லாத வடகிழக்கு பருவமழை.. மாச கடைசில மீண்டும் தொடங்கி பிப். வரை நீளும் மழை.. வெதர்மேன்
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தாழ்வான பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். விளைநிலங்களில் வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கிராம மக்கள் 400க்கும் மேற்பட்டவர்களை வருவாய்த்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அழைத்து சென்றனர். உதவி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் கிராம மக்களை அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூர், புதுக்கோட்டை முள்ளக்காடு முத்தையாபுரம், திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காணும் இடமெங்கும் வெள்ளநீராக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூரில் திருமூர்த்தி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 59.60 அடி நீர் மட்டம் நீர் நிறைந்ததையடுத்து பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.