2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்!
யாரும் என்னை கடத்தவில்லை என்று அதிமுக பெண் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்
திருத்தணி: "யாருமே என்னை கடத்தவில்லை.. 2 பக்கமும் எனக்கு நெருக்கடி தந்தாங்க.. அதனாலதான் கிளம்பி போய்ட்டேன்" என்று கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட திருத்தணி பெண் கவுன்சிலர் பூங்கொடி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கோட்டி - பூங்கொடி.. இவர்களுக்கு 4 மாத குழந்தை நிஷாந்த் என்ற குழந்தை இருக்கிறான்.
திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கடந்த, 11ம் தேதி, திருத்தணி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடந்தது. தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், அன்றைய தினம், கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதனால், திருத்தணி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ம் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடத்தல்?
இந்த சமயத்தில் கவுன்சிலர் பூங்கொடியை யாரோ கடத்திவிட்டதாக கூறப்பட்டது.. பூங்கொடியுடன் குழந்தை, நிஷாந்த், பூங்கொடியின் அம்மா வசந்தி ஆகியோரும் சேர்ந்து கடத்தப்பட்டது தகவல் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாட்ஜ்
மனைவி, குழந்தை, மாமியாரை காணவில்லை என்று கணவர் கோட்டி கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் எஸ்பி ஆபீசில் புகாரும் தந்தார்.. ஆனால் துரித நடவடிக்கை இல்லாத காரணத்தினால், கோட்டி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.. கடத்தப்பட்ட 3 பேரையும் மீட்டு தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார். இதையடுத்து, இவர்களை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது.. அதன்படி கவுன்சிலர் பூங்கொடி உள்பட 3 பேரும் திருப்பதியில் ஒரு லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது.

சரண்
இந்த சமயத்தில், பூங்கொடி, திருப்பதி அலப்பாரி போலீசில் சரண் அடைந்தார். அங்கிருந்து திருத்தணி மகளிர் போலீசாரிடம் பூங்கொடியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பூங்கொடி சொல்லும்போது, "என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. இரு தரப்பினருமே எனக்கு நெருக்கடி தந்தனர்.. அதனால்தான் என் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தேன்" என்றார்.

கடத்தவில்லை
தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் கோர்ட்டில் பூங்கொடியை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடமும் பூங்கொடி, "என்னை யாரும் கடத்தவில்லை, திருவள்ளூரில் உள்ள அம்மா வீட்டிற்கு செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு கணவர் கோட்டியுடன் சென்றார்.












Click it and Unblock the Notifications