தெள்ளார் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வெடால் அருகே உள்ள மாந்தாங்கல் என்னும் கிராமத்தில் பெருங்கற்கால வாழ்விடம் , தொழிற்கூடம் மற்றும் ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் அவ்வமைப்பைச் சேர்ந்த குணகம்பூண்டி மூ.பழனி , வெடால் விஜயன் ஆகியோர் இணைந்து வந்தவாசி வட்டத்தில் உள்ள குணகம்பூண்டி ஊரை ஒட்டிய பகுதியில் கள ஆய்வு செய்த பொழுது அவ்வூரை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான பெருங்கற்கால சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய மாந்தாங்கல் ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள மலையின் அடிவாரத்தில் , ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும் , சுமார் 4 செ.மீ சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும் மேற்பரப்பிலே கள ஆய்வில் கண்டறியப்பட்டது.

குழாய்களின் துவாரம்
இக்குழாய்களின் மத்தியில் உள்ள துவாரம் 1 செ.மீ சுற்றளவுடன் காணப்படுகிறது. சுடுமண்ணால் ஆன இக்குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காகத் துருத்தி போலத் தூரத்திலிருந்து இதுபோன்ற குழாய்கள் மூலம் காற்றுக் கொண்டுபோக இவ்வமைப்பை பயன்படுத்தி இருக்கின்றனர்.

கருப்பு சிவப்பு பானை
மேலும் அப்பகுதியில் ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் , இரும்பு உருக்கு கழிவுகளும் அதிகளவில் காணப்படுகிறது. இதன்மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை உபயோகித்து உள்ளது தெரியவருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு
இப்பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதன் பாறைகளில் இருந்த இரும்பை உலையில் வைத்து தனியாகப் பிரித்து , அதன் மூலம் கத்தி ,ஈட்டி கோடாரி, வேல், போன்ற பல பொருட்களைத் தயாரித்துள்ளதை அறியமுடிகிறது.

சமவெளி பரப்பு
இப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் மற்றொரு புறம் இதற்கு இணையாக நீண்ட கோடு போல இன்னொரு மலையும் காணப்படுகிறது. இந்த இரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளி பரப்பு காணப்படுகிறது. இவ்விடத்திலும் ஏராளமான பானை ஓடுகள் மற்றும் கல்லாயுதங்கள் காணக்கிடைக்கிறது. மலைகளுக்கிடையே அமைந்துள்ள இச்சமவெளிப் பகுதி மனிதர்களின் வாழவிடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

கல்வட்டங்கள்
இப்பகுதிக்கு மேற்கே ஏராளமான கல்வட்டங்கள் காணக்கிடைக்கிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கல்வட்டங்கள் எந்த சிதைவும் இன்றி காணப்படுகிறது. ஏனைய கல்வட்டங்கள் விவசாயம் மற்றும் ஊர் வளர்ச்சியின் காரணமாகச் சிதைந்து அதன் எச்சங்கள் இன்றளவும் அப்படியே காணமுடிகிறது. இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இன்றைய மாந்தாங்கல் ஊரின் சுடுகாடும் இந்த ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருப்பதே.

3 ஆண்டுகள்
சுமார் 3 வருடம் முன்பு இவ்வூரில் சாலையோரம் இருந்த பெரிய கல்லை நகர்த்திய பொழுது ஈமப்பேழை ஒன்று கண்டெடுக்கப்பட்டு , அது திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3000 வருடங்கள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்கள் உள்ள இவ்வூரில் தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால் இப்பகுதியின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய விசயங்கள் வெளி உலகிற்குத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications