ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் எ.வ.வேலு? - தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
திருவண்ணாமலை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி சிலை அமைக்கப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன்: 161வது பிரிவை பயன்படுத்தினால் விடுதலை உறுதி! 6 வருடங்கள் முன்பே அடித்து சொன்ன கருணாநிதி!
கருணாநிதிக்கு சிலை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்பு நிலம்
அந்த மனுவில், வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள பொது நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எ.வ.வேலு மகன்
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு, 215 சதுர அடி என பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறையினர், அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கார்த்திக் குற்றம்சாட்டியிருந்தார்.
அரசும் ஆதரவு
இந்த வழக்கில் எ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில், இது தனியார் சொத்து என்றும், அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவு
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அவகாசம் தேவை
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும் அவகாசம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை அமைக்க தடை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதுவரை, குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர். இதனால் கருணாநிதி சிலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.