அண்ணாமலையார் கோயிலில் சரமாரியாக தாக்கிக் கொண்ட பக்தர்கள்.. ஒருவரின் மண்டை உடைப்பு.. கடும் பதற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ராஜகோபுரம் நுழைவாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்,
ஆந்திரா - கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.












Click it and Unblock the Notifications