டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எண்ணை கிணறு? நோ சான்ஸ்.. அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்
திருவாரூர்; தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் எண்ணெய் கிணறு அமைப்பதற்கு அரசு அனுமதிக்காது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் ஏற்கெனவே கைவிடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து அந்நிறுவனம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேந்தமங்கலம் கிராமத்தையொட்டியுள்ள பெரியகுடி உட்கிராமத்தில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக சமாதான பேச்சு வாரத்தை நடத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கடிதம் வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
வாழ்வது, தொழில் செய்வது போல நீதியும் எளிதாக கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி
டெல்டா
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து எண்ணெய் தொடர்பான விபத்துக்கள் நடந்து வந்தன. அதாவது இந்த பகுதி நிலத்திலிருந்து மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவை ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டது. இந்த பணிகளின் போது வேளாண் நிலங்களில் எண்ணெய் கசிவு, எரிவாயு கசிவு என தொடர் விபத்துகள் நடந்தன. எனவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருந்து குரல்கள் மேலெழுந்தன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 9ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்கள் என இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதன் காரணமாக இந்த பகுதியில் எவ்வித இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளையும் எந்த நிறுவனமும் புதிதாக மேற்கொள்ளக்கூடாது என்று விதி வகுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்' உருவாக்கப்பட்டது.
தடை
இதன்படி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களுக்கான ஆய்வு, ஆழ்துளையிடுதல், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது.
சர்ச்சை
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேந்தமங்கலம் கிராமத்தையொட்டியுள்ள பெரியகுடி உட்கிராமத்தில் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக சமாதான பேச்சு வாரத்தை நடத்தப்படுவதாக சம்பந்தப்பட் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கடிதம் வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இம்மாதிரியான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கடிதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அமைச்சர் மெய்யநாதன்
இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன், "தமிழ்நாட்டின் மண்ணை மலடாக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். அதேபோல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓஎன்ஜசியின் எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்தவித அனுமதியையும் வழங்காது. இந்த பகுதிகளில் உணவு தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மட்டுமல்லாது, ஒஎன்ஜிசி எவ்வளவு முயன்றாலும் பாதுகாக்கப்பட்ட வோளண் மண்டலத்தில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கவோ அல்லது கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகளை மீண்டும் பயன்படுத்தவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கமாட்டார். தற்போது இந்நிறுவன அதிகாரிகள் சில முன்னெடுப்புகளை செய்திருக்கலாம் அதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்திற்காக சில அதிகாரிகள் திட்டமிட்டிருக்கலாம். எனவே அவர்களிடம் மாநில அரசின் நிலைப்பாடுகளை விவரித்து கூறுவோம்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் எண்ணெய் கிணறு அமைக்கப்படும் என்கிற அச்சம் மேலெழுந்த நிலையில் அமைச்சரின் பதில் அப்பகுதி மக்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தியுள்ளது.