திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் சேதம்.. அதிர்ச்சி தகவல்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேசமடைந்துள்ளன. வெளிநாட்டு கரன்சி திருட்டு, அபிவிருத்தி பணிகள், கட்டடங்கள், சாலைகள் அமைக்க கமிஷன் தொகை கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இதனை மறைப்பதற்காக ஆவணங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இங்குவரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, நாணயம், பணம், வெளிநாட்டு கரன்சிகள் என நாள்தோறும் கோடிக்கணக்கில் காணிக்கையாகச் செலுத்துவர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக பொறுப்பில் உள்ள சிலர் ஊழல் செய்து வருவதாகவும், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 150 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டு இருப்பதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அபிவிருத்தி பணி என்று கூறி கமிஷன் தொகையை சுருட்டுவதற்காக கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்து வருகின்றனர் என தேவஸ்தான நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் மீது பத்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது ஆந்திர சிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபிவிருத்தி பணிகள் என்று கூறி அவசியமில்லாத கட்டடங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு, அப்பணிகளுக்காக ஏராளமான கமிஷன் தொகை கை மாற்றப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அபிவிருத்தி பணிகள் தொடர்பான ஊழல்கள் குறித்து ஆந்திர சிஐடி போலீஸார் தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தேவஸ்தான பொறியியல் துறையில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான ஆவணங்கள் எரிந்துள்ளது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்த தீ விபத்தில் தேவஸ்தான துணை கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவை தொடர்பான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்துவிட்டன. பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் அலுவலகத்துக்குள் சென்று தீயணைப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்ததால் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து தொடர்பாக ஆய்வு செய்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான முதன்மைக் கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் கூறுகையில், "திருப்பதி தேவஸ்தான பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் ஈ ஃபைல்களாக மாற்றப்பட்டு, தேவஸ்தான சர்வரில் பாதுகாப்பாக உள்ளன. முக்கியமான ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை. எனவே, கவலைப்பட வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications