அந்தக் காலத்திலேயே இப்படி.. திருப்பதி பிரசாதத்தில் தரம் குறைந்தால் கடும் தண்டனை.. கல்வெட்டில் ஆதாரம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் நடைமுறை, பழங்காலத்தில் அதாவது, அரசர்கள் காலத்தில் இருந்தாக திருப்பதியில் இருக்கும் கல்வெட்டுகளில் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது. திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவில் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் இதற்கு முன்னர் வெடித்திருந்தாலும், மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக தற்போது வெடித்திருக்கும் சர்ச்சை உலகம் முழுவதும் இருக்கும் ஏழுமலையான் பக்தர்களை அதிர வைத்துள்ளது. இதுபோல இதற்கு முன்பு ஏதேனும் சர்ச்சைகள் எழுந்துள்ளதா என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதி திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றுள் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். கல்வெட்டுகளுள் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1,100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் சில கல்வெட்டுகளில் மன்னர்கள் தங்களின் பிறந்த நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில், திருப்பதி திருமலை கோவிலில் பூஜை செய்ய சொல்லும் போது, பெருமாளுக்கு படைக்கும் உணவு பொருட்கள் தயாரிக்கும் முறை, அதில் சேர்க்க வேண்டிய பொருட்கள், அவற்றின் அளவு குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளதாம்.
திருப்பதி கோவிலில் பிரசாதங்களை தயாரிக்கும் சமையலறையின் சுத்தத்தையும், உணவு பொருட்களின் தரத்தையும், உணவு தயாரிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களையும், கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளதாக மைசூர் கல்வெட்டியல் துறை இயக்குநர் முனிரத்தினம் தெரிவித்துள்ளார்.
பிரசாதம் தயாரிப்பவர்களோ, அர்ச்சகர்களோ தவறு செய்தால், அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வெட்டுகள் வாயிலாக தெரியவந்துள்ளன. பழைய காலத்தில் கோவில் நகைகளில் முறைகேடு செய்த நபரும், உணவு தயாரிப்பில் முறைகேடு செய்தவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தலைமுறையினர், திருப்பதி ஏழுமலையான் கோவில் தொடர்பான பணிகளில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது சமூக அந்தஸ்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக அந்தக் காலத்தில் கருதப்பட்டதாக முனிரத்தினம் கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு அந்த காலத்தில் வழங்கப்பட்ட இந்த கடுமையான தண்டனைகள், ஏழுமலையான் கோவிலின் புனிதத்தன்மையை உறுதி செய்வதற்காக வரலாறு முழுவதும் கோயில் அதிகாரிகளால் பராமரிக்கப்படும் உயர் தரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
திருப்பதி லட்டுகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகளால், கோவிலின் தற்போதைய நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் வரலாற்று சான்றுகள் கோவிலின் பாதுகாவலர்கள் உணவு தயாரிப்பின் தரத்தை உறுதி செய்ய நீண்ட காலமாக தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications