நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்... ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் டும் டும் டும்
திருப்பதி: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இடையே ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.
அச்சு அசலாக நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் சின்னத்திரை நயன்தாரா..அசந்து போன ரசிகர்கள்
7 ஆண்டு காதல்
7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் ஒன்றாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இதில் திரைப்படங்களை இருவரும் ஒன்றாக சேர்ந்து தயாரித்து வருகின்றனர். நயன்தாரா தொடர்ந்து கோலிவுட்டில் நாயகியாக கோலோச்சிக் கொண்டிருக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவதுடன் ஏராளமான ஹிட் பாடல்களுக்கு வரிகளையும் எழுதி வருகிறார்.
எப்போது திருமணம்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலிப்பதாக செய்தி வெளியானதில் இருந்தே இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் அவ்வப்போவது பரவி வருவது வாடிக்கையாகவே இருந்தது. எதற்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருமே செவிசாய்க்காமல் அவரவர் வேலையை கவனித்து வந்தனர்.
அஜித் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து நயன்தாரா, சமந்தா ஆகிய 2 நாயகிகளை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
வதந்தி
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இதற்கும் வழக்கம்போல அமைதி காத்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
ஜுன் 9 ஆம் தேதி
அவர்களிடம் திருமணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போது வருகிற ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பார்வையிடுவதற்காக இன்று திருப்பதி வந்துள்ளதாகவும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கின்றனர்.
கேரளாவில் வரவேற்பு?
கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக இருவரும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நயன்தாராவின் சொந்த மாநிலமான கேரளாவில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.