திருப்பதிக்கு படி ஏறியபோது.. தமிழகத்தை சேர்ந்த புது மாப்பிள்ளை பலி.. நேர்த்திக்கடனின் போது சோகம்
திருப்பதி: பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி கோயிலுக்கு அலிபிரி நடைபாதை வழியாக சென்ற புதுமாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் திருத்தணியை சேர்ந்த நரேஷ் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி நடைபாதை மூலமாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில்தான், திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ஐடி நிறுவனத்தில் வேலை: தமிழகத்தின் திருத்தணியை சேர்ந்தவர் நரேஷ். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நரேஷுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஸ்வாதி என்ற பெண்ணை நரேஷ் மணம் முடித்துள்ளார். புதுமண தம்பதிகள் விருந்தினர் இல்லங்களுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் நேர்த்திக்கடனாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்துள்ளார்.
சுருண்டு விழுந்து பலி: அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2,350 வது படிக்கு வந்து போது திடீரென அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் நரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பதி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலிபிரி நடைபாதை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி உலகம் முழுவதிலும் இருந்து இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மட்டும் பல கோடிகளை தாண்டும். உலகிலேயே பணக்கார கடவுகளில் ஒருவராக திருப்பதி எழுமலையான் உள்ளார்.
திருப்பதி கோயிலுக்கு நடைபாதை தரிசனம் என்றால் இரு வழிகளில் வரலாம். ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரி மெட்டு. அலிபிரி நடைபாதை மொத்தம் 12 கி.மீ. தொலைவு கொண்டது ஆகும். இங்கு 3,550 படிகள் உள்ளன. இந்த வழி திருமலை யாத்திரை தொடங்கும் முன் சாலை வழியாக செல்லும் பக்தர்கள் பாதாள மண்டபத்திற்கு வந்து அங்கிருந்து செல்வார்கள். இது 2- ஆவது மலை சாலையில் உள்ளது.
ஸ்ரீவாரி மெட்டு பகுதி: இங்கு 4 கோபுரங்கள் உள்ளன. முழுவதும் கூரைகள் வேயப்பட்டு மழை, வெயில், கடுங்குளிரில் இருந்து பக்தர்களை பாதுகாக்கிறது. இங்குள்ள காளி கோபுரம் வரை சென்றால் முக்கால்வாசி மலையை அடைந்துவிட்டதாக அர்த்தம். எனவே இந்த இடத்தில்தான் திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசன டிக்கெட்டுகள் கொடுக்கப்படும்.
அதேபோல ஸ்ரீவாரி மெட்டு பகுதி என்பது 2,388 படிகட்டுகள் மட்டுமே கொண்ட குறுகிய பாதையாகும். சீனிவாச மங்காபுரத்திலிருந்து இந்த ஸ்ரீவாரி மெட்டுக்கு செல்ல வேண்டும். இந்த பாதையை கடக்க 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை பக்தர்களுக்கு ஆகும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக தினமும் பெரும்பாலான பக்தர்கள் செல்கிறார்கள். ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு அடிவாரத்திலேயே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications