புரட்டாசி 3வது சனிக்கிழமை..திருப்பதியில் குவியும் பக்தர்கள்..36 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு
திருப்பதி: பிரமோற்சவம் முடிந்த நிலையில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 36 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 1ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் அதற்கான டிக்கெட்டுகள் வரும் 10ஆம் தேதி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு தரிசனம், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9 நாட்களில் மட்டும் 20 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை
இந்நிலையில், பிரமோற்சவம் முடிந்தாலும் புரட்டாசி மாத உற்சவங்கள் நடைபெறுவதால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் தங்கும் அறைகள் நிரம்பி சாமி தரிசனம் செய்ய 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புரட்டாசி 3வது சனிக்கிழமை
புரட்டாசி 3வது சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழக பக்தர்கள் என கூறப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

புஷ்ப யாகம்
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பங்கேற்க வரும் 10ம் தேதி ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை
அதன்படி, இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. கோயிலுக்குள் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் https://tirupatibalaji.ap.gov.in/#/login டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து வரும் 1ஆம் தேதி புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதில், கர்நாடகாவிலிருந்து 4 டன், தமிழகத்திலிருந்து 3 டன், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து தலா 1 டன் என மொத்தம் 9 டன் மலர்கள் கொண்டு வரப்படும். ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்றவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்படும்.












Click it and Unblock the Notifications