திருப்பதியில் ஓடும் பஸ்சில் திடீரென கயிறைக் கட்டிய இளைஞர்.. அடுத்து நடந்த சோகம்! பயணிகள் அலறல்
திருப்பதி: திருப்பதி சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசு பேருந்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரேணிகுண்டா அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞர் பஸ் கம்பியில் கயிறைக் கட்டி தூக்கிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து நேற்று அதிகாலை திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் பெரிதாக இல்லை. ஒரு சில சீட்களில் மட்டுமே பயணிகள் இருந்தனர். ரேனிகுண்டா அருகே உள்ள மேர்லபாக்கம் பேருந்து நிலையத்தில், 25 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறினார்.

பேருந்தில் ஏறியதும் கூட்டம் இல்லாத கடைசி இருக்கைக்கு அந்த இளைஞர் போய் அமர்ந்து உள்ளார். பேருந்து நடத்துனர் இளைஞரிடம் டிக்கெட் கொடுத்து இருக்கிறார். டிக்கெட் வாங்கிய பிறகு நடத்துநர் தனது இருக்கைக்கு சென்றுள்ளார். பேருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த இளைஞர், தான் கொண்டு வந்திருந்த கயிற்றால் பேருந்து கம்பியில் கட்டியிருக்கிறார்.
கூட்டம் இல்லாததால் பயணிகள் யாரும் இதை கவனிக்கவில்லை. திடீரென அந்த இளைஞர், பேருந்து கம்பியில் கட்டிய கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்தே இதை பயணிகள் பார்த்ததாக தெரிகிறது. திடீரென பேருந்தில் பயணி ஒருவர் தூக்கிட்ட நிலையில் கிடப்பதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் சத்தம் போட்டதை பார்த்து டிரைவரும் பஸ்சை ஓரம் கட்டினார்.
நடத்துநரும் சக பயணிகளும் சென்று பார்த்த போது, பயணி மூச்சு பேச்சு இல்லாமல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து உடனடியாக ரேணிகுண்டா போலீஸ் நிலையத்திற்கு பேருந்தை டிரைவர் ஓட்டிச்சென்றார். போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கோண்டுள்ளார்.
பேருந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பயணி எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேருந்தில் பயணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications