திருப்பதியில்... தமிழ்நாடு அமைச்சர்கள்... சுவாமி தரிசனம்!!
திருப்பதி: திருமலையில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கருப்பண்ணன் இருவரும் இன்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மற்றபடி பக்தர்கள் இல்லாமல் தினப்படி பூஜைகள் நடந்து வந்தன. தற்போது சிறிது சிறிதாக நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களுக்கு அன்லாக் 4.0ல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாட்டின் பெரிய கோயில்கள் அனைத்தும் பக்தர்களுக்காக கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டது. புதிய விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலும் திறக்கப்பட்டது.
இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இருவரும் நேற்று இரவு சென்று இருந்தனர். இவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர். இன்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.
தரிசனத்தை முடித்த இவர்களுக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம், லட்டு, வடை, பத்மாவதி தாயார் ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடனும் தனியாகவும், அமைச்சர் கருப்பண்ணன் தனியாகவும் தரிசனத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications