3 சிறுவர்களின் உயிரை குடித்த கெட்டுப்போன உணவு..பதற்றத்தில் திருப்பூர்.. கலெக்டர் விளக்கம்
திருப்பூர்: ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வந்த பிறகே குழந்தைகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 சிறுவர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்திய பின்னர் 14 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

3 சிறுவர்கள் மரணம்
காப்பகத்தில் குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது அங்கு மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கெனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கவலைக்கிடம்
அத்துடன் தரணிஷ், கௌதம், சபரீஷ் , சதீஷ் ,குணா , அர்ஷத் , ரித்தீஷ், ஸ்ரீகாந்த், மணிகண்டன் ஆகிய 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும், சிறுவர்கள் கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் ட்வீட்
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விசாரணை
குழந்தைகள் காப்பகத்தில் திருப்பூர் ஆணையர் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டறிந்தார். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் உயிரிழந்த சிறுவர்களின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் மாவட்ட ஆட்சியர் வினீத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications