பேஸ்புக்கில் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு.. பாஜக ஐடி விங் நிர்வாகி கைது.. சுற்றி வளைத்த போலீஸ்!
திருப்பூர் : சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும், சட்டம் ஒழுங்கு குறித்தும் அவதூறு பரப்பிய பாஜக திருப்பூர் மாவட்ட ஐடி விங் நிர்வாகியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழிநுட்ப பிரிவு செயலாளரான வினித் குமார் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளது என்கிற ரீதியில் அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பாஜக ஐடி விங் மாவட்ட செயலாளரான வினித் குமார்.

தீவிரமாக கண்காணிக்கும் போலீஸ்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து, அதில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். மக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புவோர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜகவின் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ரைட்டர் வினித்குமார் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "தினம் தினம் பெட்ரோல் குண்டு.. பற்றி எரியும் தமிழகம், சட்டம் ஒழுங்கு - I Dont Care CM நேரடி கட்டுப்பாட்டில். அடப்பாவமே! சர்வாதிகாரிக்கு இப்படியொரு சோதனையா?" என்று சித்தரிக்கப்பட்ட கார்ட்டூன் படத்துடன் பதிவு செய்திருந்தார்.

பாஜக ஐடி விங் - ரைட்டர் வினித் குமார்
சமூக வலைதளங்களில் பிரச்னைக்குரிய கருத்துகளை பதிவு செய்து தமிழக முதலமைச்சரையும் தமிழக காவல்துறையையும் அவதூறு பரப்பியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு ரைட்டர் வினித் குமார் வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர், வினித் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தாராபுரத்தில் பரபரப்பு
பின்னர் வினித்குமாரை கோவை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications