வேண்டாம் உயர்மின் அழுத்த கோபுரம்… திருப்பூரில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறுடன் போராட்டம்
திருப்பூர் : விவசாய விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அருகே 9 வது நாளாக இன்று விவசாயிகள் தூக்கில் தொங்குவது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. அதையொட்டி கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்த்து அவர்கள் 9 வது நாளான இன்று அங்குள்ள விவசாயிகள் தூக்கில் தொங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறுகையில், இதுவரை அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான பேச்சு வார்த்தைக்கும் வரவில்லை. எங்களது கோரிக்கைகளை ஏற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தங்களது காத்திருப்பு போராட்டமும் உண்ணாவிரத போராட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
விவசாயிகள் தூக்கில் தொங்குவது போல முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மீண்டும் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.