திருப்பூர் வேறு ஒருவரின் மனைவியை திருமணம் செய்து வைக்க மறுப்பு.. தாத்தாவை அடித்தே கொன்ற பேரன்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வேறு ஒருவரின் மனைவியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாத்தாவை கைத்தடியால் அடித்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வேலம்பாளையம் ஊராட்சி ந.கரையூர் பகுதியை சேர்ந்த 65 வயதை கடந்த முனியப்பனுக்கு 27 வயதில் அருண்குமார் என்ற பேரன் இருக்கிறார். அருண்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விட்டது. ஆனாலும் அருண்குமார் அந்த பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அருண்குமார் தனது தாத்தா முனியப்பனிடம் சென்று ஏற்கனவே திருமணமான அந்த இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன், அந்த பெண் வேறொருவரின் மனைவி, அவளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. எனவே அவளை மறந்து விடு என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற அருண்குமார் தனது தாத்தா என்றும் பாராமல் முனியப்பன் வைத்திருந்த கைத்தடியை வாங்கி அவரை பலமாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பன் கீழே விழுந்து உயிருக்கு போராடி உள்ளார்.. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முனியப்பனை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications