திருப்பூர் என்கவுண்ட்டரில் பலியான மணிகண்டன்.. சொந்த ஊருக்குள் உடலை அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்!
திருப்பூர்: திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிகண்டன், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணிகண்டன் உடலை கிராமத்துக்குள் அனுமதிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குள் செவ்வாய் கிழமை இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மூர்த்தியை இரண்டு மகன்களும் கடுமையாக தாக்கி, அரிவாளுடன் துரத்தியதாக தெரிகிறது.

தகவல் அறிந்து ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்றார். அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, மூவரும் இணைந்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். சண்முகவேலுடன் வந்த ஓட்டுநரையும் அவர்கள் அரிவாளுடன் துரத்திய நிலையில், தப்பிச் சென்ற அவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தந்தை மூர்த்தி, மகன் தங்கப்பாண்டியன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். மற்றொரு மகனான மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டன் சிக்கலூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மணிகண்டனை பிடித்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை அவர் வெட்டி விட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டனின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் மணிகண்டன் உடலை நாயக்கனூருக்கு கொண்டு செல்ல அவரது தாயார் ஏற்பாடுகள் செய்தார். ஆனால் நாயக்கனூர் கிராம பொதுமக்களோ, மணிகண்டன் உடலை ஊருக்குள் அனுமதிக்க முடியாது, அப்படியே ஊருக்கு வெளியே உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட வேண்டும் என முதலில் கூறி உள்ளனர்.
பின்னர் நாயக்கனூர் ஊர் மக்கள் ஒன்று கூடி, மணிகண்டன் உடல் வந்து சேர நள்ளிரவு ஆகிவிடும்.. அதனால் ஊர்க்காரர்கள் சிலர் திருப்பூர் சென்று அங்கே மயானத்தில் மணிகண்டன் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவெடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் உடல் திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications