மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவர் கைது
திருப்பூர்: பலமுறை கூறியும் கேட்காமல் வேறு ஒருவருடன் தகாத உறவை தொடர்ந்ததாக மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் அவிநாசியில் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் நகை திருட யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் அருகில் இருந்த சிசிடிவி காட்சியால் போலீசாரிடம் சிக்கினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் காமராஜ் வீதி பகுதியை சேர்ந்தவர் விஜய் (35). அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ப்ரியா-(30) என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

போனை எடுக்கவில்லை
புதன்கிழமை விஜய் வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். ப்ரியா தனது இரு மகள்களையும் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் காலை 11.00 மணிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலை 11.30 மணி முதல் பகல் 01.58 மணி வரை தனது மனைவி தனது செல்போன் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த விஜய் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு அழைத்து கடை உரிமையாளர் சித்ரா என்பவரிடம் விவரத்தை கூறியிருக்கிறார்

ப்ரியா காயம்
இதையடுத்து சித்ரா விஜய் வீட்டில் சென்று பார்த்த போது சமையலறையில் ப்ரியா ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்து, விஜயிடம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

குடும்ப பிரச்சனையா
முதற்கட்ட விசாரணையில் ப்ரியா அணிந்திருந்த சுமார் நாலேகால் பவுன் தங்க நகைகள், காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதும், தாடையில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கழுத்து பகுதிகளில் லேசான காயங்களும் இருப்பது தெரியவந்தது. இது குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட கொலையா அல்லது நகைக்காக செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

போலிசார் அதிர்ச்சி
இந்நிலையில் பிரியாவை கொன்றது யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். மோப்ப நாயை வைத்து சோதித்தனர். மோப்ப நாய் பிரியாவின் கணவர் விஜய் அருகில் சென்றுள்ளது. ஆனால் கணவர் என்பதால் போலீசார் அதை உறுதி செய்யவில்லை. அதன்பிறகு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு அப்படியே அருகில் இருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர்.

தகாத உறவு
இதில் சத்தம் இல்லாமல் பிரியாவின் கணவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. போலீசாரிடம் வீட்டுக்கு வரவே இல்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில், அவர் கொலை நடந்த சமயத்தில் வந்து சென்றது சிசிடிவி காட்சியில் உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர், மனைவியை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். : பலமுறை கூறியும் கேட்காமல் வேறு ஒருவருடன் தகாத உறவை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் இருந்ததாகவும். இதனால் அலுவலத்தில் பெர்மிசன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications