பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கூலிப்படை ஏவி வெட்டிய போலீஸ்காரர்.. இப்படி ஒரு காரணமா?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கூலிப்படையை ஏவி அரிவாளால் வெட்டிய புகாரில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தான் சஸ்பெண்ட் ஆக காரணமாக இருந்த செய்தியாளரை ஆள் வைத்து காவலர் வெட்டியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு. இவருக்கு 30 வயது ஆகிறது. நேசபிரபு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பல்லடம் தாலுகா ரிப்போர்ட்டராக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த ஜனவரி 24-ம் தேதி இரவு பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை மர்ம மனிதர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன், பிரவீன்குமார், முகமது சபி, அரிகரன், ஜெயபிரவீன், பாலபாரதி, முகமது உமர், கருப்பசாமி, அப்துல் சலாம், தம்பி பிரபாகரன், சோமசுந்தரேஸ்வரன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சுபின் பிரபு (36) நேற்று முன்தினம் இரவு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் நேசபிரபுவை கூலிப்படை ஏவி போலீஸ்காரர் சுபின் பிரபு கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.. திருப்பூர் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு காவலர் தான் சுபின்பிரபு. இவர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ஒரு ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டதாகவும், இது குறித்த செய்தியை நேசபிரபு டி.வி.யில் வெளியிட்டதாகவும், இதனால் சுபின் பிரபு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த போலீஸ்காரர் சுபின் பிரபு, கூலிப்படையினரை ஏவி அரிவாளால் வெட்டியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சுபின் பிரபு முன்ஜாமீன் பெற முயற்சித்துள்ளார். ஆனால் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் போலீசில் அவர் சரண் அடைந்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications