என் மகனுக்கு நானே பை தச்சு தர்றேன்.. விம்மி அழுத கலைமேரி.. நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட மக்கள்
சுஜித்தின் தாய் மகனுக்காக பை தைத்து தந்துள்ளார்
Recommended Video
மணப்பாறை: "அழுகாத சாமி, அழுகாத.. அம்மா எப்படினாலும் உனைய மேல எடுத்துறேன்" என்று குழந்தைக்கு பெற்ற தாய் ஆறுதல் சொன்னதை கேட்டு பொதுமக்களே கலங்கிவிட்டனர். இதையடுத்து, "என்னது.. பை வேணுமா.. இருங்க நானே தச்சு தர்றேன்" என்று குழந்தை சுஜித்தை மீட்க அவரது தாய் மேரி அடக்கமுடியாத கண்ணீருடன்.. தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்து தந்துள்ளார் என்ற உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் 70 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளான். அவனை மீட்க அனைவருமே போராடி வருகிறார்கள். குழந்தையை நல்லபடியாக மீட்க வேண்டும் என்பதே இப்போதைய பிரார்த்தனையாக உள்ளது.
குழந்தை போர்வெல்லுக்குள் விழுந்து விட்டான் என்ற தகவலை கேட்டதில் இருந்தே அம்மா மேரி, அதிர்ச்சிடைந்து மயங்கிய நிலையிலேயே இருந்தார். ஆனாலும் ராத்திரி நேரம், குழந்தை பயந்துவிடுவான் என்பதால், அவரை சொந்தக்காரர்கள் தேற்றி சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து பேச வைத்தனர்.
போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்.. திண்டுக்கல் தர்மராஜ் தரும் யோசனை!
பேச்சு
குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டதால் அனைத்து தரப்புக்கும் ஓரளவு நிம்மதி கிடைத்தது. நைட் நேரம் என்பதால் குழந்தை பயந்துவிடகூடாது என்பதற்காக சுஜித்தின் அம்மா மேரியை குழந்தையுடன் பேச வைத்தனர்.
அழுகாதே சாமி
"அழுகாத சாமி, அழுகாத.. அம்மா எப்படினாலும் உனைய மேல எடுத்துறேன்" என்று சுஜித்திடம் பேச்சு தந்து கொண்டே இருந்தார். அதற்கு "உம்" என்று குழந்தை பதிலளித்தான். இதைகேட்டதும் அனைவருக்குமே ஒரு தெம்பு வந்தது. ஆனால் இன்று காலை முதல் குழந்தையிடம் இருந்து சத்தமே கேட்கவில்லை என்கிறார்கள். குழந்தையை சுற்றி மண் விழுந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதனால் மகனின் நிலைமையை அறிந்த மேரி, காலையிலேயே மயங்கி விழுந்துவிட்டார். அதனால் அவருக்கு அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை தந்தனர்.
யோசனை
இவ்வளவு பலவீனமான, பாசமுள்ள தாய், தன் குழந்தையை மீட்க உதவி உள்ளார். குழந்தையை எவ்வாறு வெளியே எடுக்கலாம் என்று பலவாறாக யோசித்தபோது, ஒரு பையில் வைத்து தூக்கலாம் என மீட்புப் படையினர் சொல்லி உள்ளனர்.
நானே தச்சு தரேன்
ஆனால், குழந்தையை அலேக்காக தூக்க வேண்டும் என்றால், அதற்கான பை தேவை.. அந்த நேரத்தில் அப்படி தோதான பை கிடைக்காமல் மீட்பு குழுவினர் தவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் தாய் மேரி, நானே பை தைச்சு தரேன் என்று சொல்லி, தன் கையாலேயே உடனடியாக பையை தைத்து கொடுத்துள்ளார்.
உருக்கம்
பதட்டம், கலக்கம், பீதி, கண்ணீர், என ஒட்டுமொத்த உணர்வுகள் கொட்டி கிடக்க, அந்த சோகத்திலும் மேரி, தன் குழந்தைக்காக தையல் மெஷினில் உட்கார்ந்து பை தைத்துக் கொடுத்துள்ளார். இந்த உருக்கமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. மேரி தைத்த அந்த பை இப்போது மீட்பு படையினரிடம்தான் உள்ளதாம். குழந்தையை மேலே தூக்கும்போது, இந்த பையை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.