Crime stories 2019: இதுதாங்க அவர் ஸ்பெஷலே.. அதிர வைத்த மஞ்சுளா.. மிரள வைத்த திருட்டு முருகன்!
திருச்சி: இந்த வருடத்தில் தமிழகத்தில் நடந்த மிக மிக முக்கியமான, அதிர்ச்சிகரமான கொள்ளை திருச்சி லலிதா ஜுவல்லரிதான்.. முருகன் என்ற கேங் லீடரின் மாஸ்டர் பிளானில் இந்த கொள்ளை நடந்து இன்றுவரை பரபரப்பு அடங்காமல் உள்ளது!
திருச்சி நகரின் மையத்தில் உள்ளது லலிதா ஜுவல்லரி.. ஏகப்பட்ட சிசிடிவி கேமிராக்கள், வாட்ச்மேன்கள் இருந்தும் சுவற்றில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைரநகைகளை அள்ளி சென்றனர். கேங் லீடர் முருகன் என்பவன்தான்.. அடுத்ததாக முருகனின் அக்கா மகன் சுரேஷ்.. கணேசன், மணிகண்டன் என 4 பேர் சிக்கி உள்ளனர். திருச்சி அருகேயுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒன்றாக இணைந்து கொள்ளையடித்ததும் இவர்கள்தான்.
நைட் வாட்ச்மேன்கள் 6 பேர் இருந்தும் பிரயோஜனமில்லை. கடையில் சிசிடிவி கேமராவும் சரியாக வேலை செய்யவில்லை. இதைதவிர சாதாரண நகை கடைகளில் இருக்கும் அலாரம் கூட, இந்த கடையில் இல்லாதது மிகப்பெரிய ஆச்சரியம்! இதெல்லாம்தான் கொள்ளையர்களுக்கு சாதகமாக போய்விட்டது.
மணிகண்டன்
7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் 2-வது நாளே கொள்ளையன் மணிகண்டன் சிக்கினான். கொள்ளை அடித்தது மொத்தம் 8 பேர். ஆளுக்கு 5 கிலோ நகையை பங்கு போட்டு கொள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கி உள்ளனர். அங்கே நகையை பிரித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓட முயன்றபோதுதான் மணிகண்டன் சிக்கியது.
நோட்டம்
நகை கடையில் கொள்ளை அடிக்க 2 மாசமாக இந்த பகுதியிலேயே வீடு எடுத்து தங்கி இருந்தான். ரொம்ப நாளாகவே குடும்பத்துடன் நோட்டமிட்டுள்ளான் முருகன். இதைவிட முக்கியமான விஷயம், 2 மாசத்துக்கு முன்பு இதே லலிதா ஜூவல்லரி கடைக்கு நகை வாங்குவதுபோல, இவர்கள் எல்லாருமே கடைக்கு வந்திருக்கிறார்கள். அப்போதுதான் எந்த இடம் கொள்ளையடிக்க வசதியாக உள்ளது என்று நோட்டம் போட்டுள்ளனர்.
மொத்தம் 5 நாள்
கடைக்கு இடது பக்கத்தை அப்போதுதான் தேர்வு செய்தனர். அந்த இடத்தில் ஓட்டை போட்டால், கடைக்குள் இந்த பகுதிக்கு எளிதாக வரலாம் என்று பிளான் செய்தபிறகுதான் கடையை விட்டு வெளியே வந்துள்ளனர். இதற்கு பிறகு, தினமும் ராத்திரி நேரத்தில் இங்கு இவர்கள் வந்துவிடுவார்களாம். சத்தமே வராத மாதிரி சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை போட ஆரம்பித்துள்ளனர். ஓட்டை போடுவதற்கு மட்டும் மொத்தம் 5 நாள் ஆகியிருக்கிறது.
சிக்னல்
இந்த துளையை போடுவதில் முருகன் கில்லாடியாம். வழக்கமாக திருட்டு சமயங்களில் பயன்படுத்தும் வாக்கி டாக்கியை இவர்கள் பயன்படுத்தவில்லை. வெறும் சைகை மற்றும் கயிறுதான். இந்த கயிறுமூலம்தான் 4 பேருக்குள்ளும் சிக்னல் பரிமாற்றம் நடந்துள்ளது.
கயிறு மூலம் சிக்னல்
"ஃபேன்சி ஸ்டோரில் பொம்மை மாஸ்க் வாங்கினோம். காஸ்ட்லியான மாஸ்க் வாங்கினால், அது ஈஸியா கண்டுபிடிச்சு தந்துடும் இல்லை, அதனாலதான் சாதாரணமான மாஸ்க் வாங்கி கொண்டோம்.. 2 பேர் உள்ளே போனோம்.. வெளியில ஒரு ஆளை சிக்னல் தர நிக்க வெச்சோம். சத்தம் போட்டு சிக்னல் தந்தால் மாட்டிக்குவோம் என்று காலில் கயிரை கட்டிக் கொண்டு சிக்னல் தந்து கொண்டோம். யாருமே பேசிக்கவில்லை. கொள்ளை நடந்து முடியும்வரை செல்போனும் யூஸ் பண்ணவில்லை" என்று அடுத்தடுத்த நுணுக்கமான டெக்னிக்கை சொன்னார் மணிகண்டன்.
கொள்ளை நகை
இதேபோல, முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் விசாரித்தபோது, "கொள்ளையடிச்ச நகைகளை அவர் யார்கிட்டயும் கையில் தர மாட்டார்.மண்ணுக்கு அடியில் புதைச்சுதான் வெப்பார். இதுதான் அவர் ஸ்டைல். ஆனா, எங்கே புதைக்கிறார், எப்ப புதைக்கிறார், எப்போது எடுக்கிறார்.. இதெல்லாம் அவருக்கு மட்டும்தான் தெரியும். பணம் எப்போ தேவையோ, அப்போ புதைத்த நகைகளை வெளியே தோண்டி எடுத்து பணமா மாத்திடுவார்.
வாக்குமூலம்
அந்த பணத்தையும் என்கிட்ட தர மாட்டார். தண்ணி பிடிச்சி வைக்கும் டிரம்மில்தான் நிரப்பி வைத்திருப்பார். அது ஒரு ராசியான டிரம்" என்று அடுத்த அதிர்ச்சியை தந்தார். இப்போது இன்னமும்கூட முருகன் & கோவிடம் இந்த கொள்ளை வழக்கின் விசாரணை முடியாமல் தொடர்ந்து நடந்து வந்தபடியே உள்ளது.