7 வயது சிறுமியை நாசப்படுத்திய அதிமுக பிரமுகர்.. கட்சியை விட்டு தூக்கி எறிந்த இபிஎஸ், ஓபிஎஸ்!
Recommended Video
திருச்சி: 7 வயது சிறுமியை நாசப்படுத்திய அதிமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளராக இருப்பவர் மீரான் மைதீன். இவருக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் பள்ளியின் செயலாளர் சலீமை தாளாளர் பொறுப்பில் அமர வைத்திருந்தார். 50 வயதாகும் சலீம், 49 ஏ வட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார்.
இவர் சமீபத்தில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவியை மடியில் உட்கார வைத்து அசிங்கமாக நடந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் சலீமை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தார். இந்த சம்பவம் ஆழ்வார்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சியை விட்டு நீக்கம்
இந்த நிலையில், தற்போது சலீமை கட்சியை விட்டு நீக்கியுள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநகர் பகுதி 49-ஏ வட்ட செயலாளர் முகமதுசலீம் (எ) செக்கடி சலீம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.