கோவை தலைகள் அப்செட்? கெத்தை காண்பிக்க திருச்சியில் ஜன.17-ல் மெகா மாநாடு நடத்துவதில் இபிஎஸ் படுஜோர்?
திருச்சி: அதிமுகவில் தமக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதை என்பதை டெல்லிக்கு வெளிப்படுத்த பிரம்மாண்டமான மாநாட்டை திருச்சியில் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு பெரும்பான்மை இல்லை; டெல்லி பாஜக ஆதரவை வைத்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது ஓபிஎஸ் கோஷ்டி என்கிறது இபிஎஸ்.
அதிமுக பொதுக்குழு மட்டுமல்ல, பெரும்பான்மை நிர்வாகிகள் ஆதரவு தங்களுக்குதான் இருக்கிறது என்கிறது இபிஎஸ் கோஷ்டி. ஆனால் ஒருங்கிணைந்த அதிமுகவே தங்களுக்கு தேவை என்கிறது பாஜக.
தவப் புதல்வனின் ’கலகத் தலைவன்’ குறித்து தான் முதல்வருக்கு கவலை! அதிமுக ஆர்பி உதயகுமார் விமர்சனம்!
பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு
இபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என யாரையும் சேர்ப்பது இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. இந்த நிலைப்பாட்டை இபிஎஸ் கோஷ்டியின் பெரும்பான்மை தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதேநேரத்தில் பாஜகவே வேண்டாம் என இபிஎஸ் முடிவெடுத்ததைத்தான் சில தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்கின்றன செய்திகள். குறிப்பாக இபிஎஸ்-க்கு வலதும் இடதுமாக இருக்கும் கோவை தலைகள் இதனை ரசிக்கவில்லை; காரணம் அவர்கள் மீதான வழக்குகள்தான் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
மாநாடு நடத்த முடிவு
ஆனால் இதனைப் பற்றி எல்லாம் இபிஎஸ் தரப்பு கவலைப்படாமல் தங்களது ஆதரவு தளத்தை தக்கவைக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறதாம். அதிமுக தொடர்பான வழக்குகள் எப்படிப் போனாலும் தொண்டர்கள், நிர்வாகிகள் பலம் தங்களுக்குதான் இருக்கிறது என்பதை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பது இபிஎஸ் அணியின் முனைப்பாக இருக்கிறதாம். இதற்காகத்தான் இபிஎஸ் எங்கே சென்றாலும் மாஸ் காண்பிக்க வேண்டும் என்ற கணக்குப் போடப்பட்டு வருகிறதாம்.
கோவை தவிர்ப்பு?
இதன் உச்சமாகத்தான் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றையே நடத்தலாம் என திட்டமிடுகிறதாம் இபிஎஸ் தரப்பு. அதிமுக தொடங்கியதன் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மாநாட்டை நடத்தலாம் என நினைக்கிறது இபிஎஸ் டீம். முதலில் இந்த மாநாட்டை கோவையில் நடத்தலாம்; கோவையில் மாநாடு நடத்தலாம் நிச்சயம் மிகப் பெரும் மாஸ் காட்ட முடியும் என்றுதான் இபிஎஸ் டீம் கணக்குப் போட்டதாம். ஆனால் கோவை தலைகள் ஆளுக்கு ஒரு திசையில் முகம் காட்டுவதால் தவிர்க்க நினைக்கிறாராம் இபிஎஸ்.
திருச்சியில் மாநாடு?
இதனையடுத்தே திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தலாம் என ஏற்பாடுகள் செய்யப்படுகிறதாம். பொதுவாக திராவிட கட்சிகளுக்கு திருச்சி மாநாடு திருப்புமுனை தரும் என்று சொல்வார்கள். திமுகவுக்கு திருச்சி மாநாடு அப்படியான பல திருப்புமுனைகளை தந்துள்ளது. அதிமுகவுக்கு பொதுமாக எம்ஜிஆர் காலம் முதல் மதுரை மாநாடுதான் கை கொடுக்கும் என்பார்கள். இப்போதைய சூழலில் மதுரையை விட திருச்சிதான் நல்லது; பரவலாக கூட்டத்தைக் கூட்டி பலத்தை காட்ட முடியும் என நினைக்கிறதாம் இபிஎஸ் தரப்பு.
மதுரையில் நடக்குமா?
அதேநேரத்தில் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் மதுரையில் மாநாடு நடத்தி மாஸ்காட்டினால் இபிஎஸ் கோஷ்டியில் அடுத்த இடத்துக்கு முன்னேற முடியும் என கால்குலேசன் போடுகிறதாம். இதனால் மதுரையில் எப்படியாவது மாநாடு நடத்த அனுமதி வாங்கிவிடலாம் என முட்டி மோதுகிறதாம் ஆர்பி உதயகுமார் அண்ட் கோ. இன்னமும் இபிஎஸ் தரப்பில் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லையாம். மதுரை அல்லது திருச்சியில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ல் இபிஎஸ் கோஷ்டியின் மாஸ் காட்டும் மாநாடு நடைபெற சாத்தியங்கள் அதிகம் என்பதே இப்போதைய லேட்டஸ்ட் தகவல்.