”வாயை திறந்தாலே பொய்” நாகரிகத்தை எதிர்பார்க்க முடியவில்லை.. அண்ணாமலையை விளாசிய முத்தரசன்!
திருச்சி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் பேசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த நிர்வாகி ராமண்ணின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு கல்வெட்டை புத்தூர் ஆட்டுமந்தை தெருவில் மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து திருச்சி மேயர் மு.அன்பழகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் கூறுகையில், மத்திய அரசு மானியம் தர மாட்டோம் என்று அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தாலும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை வீடுகளுக்கான சலுகை தொடரும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே விலைவாசி உயர்வில் மக்கள் சிரமப்படும் இந்த வேளையில் மின் கட்டணம் உயர்த்திருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். அவரிடம் எந்த அரசியல் நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியவில்லை. செருப்பு வீசுவதையும் நியாயப்படுத்துகிறார். வன்முறையை தூண்டிவிடுவது போல் பேசுகிறார். இதனால் அவர் சொல்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று தெரிவித்தார்.

ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை
தொடர்ந்து ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது கன்னியாகுமரியில் ராகுல் காந்தி முன் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய சர்ச்சை கருத்து பற்றி கேட்டதற்கு, அவரவர் மதத்தின் கடவுளை உண்மையான கடவுள் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. சர்ச்சைக்குரிய கருத்து கிடையாது. அவரைக் கேட்டால் "இயேசு" என்று சொல்லுவார். இஸ்லாமியரை கேட்டால் "அல்லா " என்று சொல்வார்கள். இந்துக்களை கேட்டால் "திருமால்" என்று சொல்வார்கள் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு
அதேபோல், நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனைக்குரியது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் டெல்லி சென்று வலியுறுத்தியுள்ளார். தென் மாநில மாநாட்டிலும் வலியுறுத்தியுள்ளார். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ராகுல் டீ-சர்ட் சர்ச்சை
அதேபோல், ராகுல் காந்தியின் டீ-சர்ட் குறித்த சர்ச்சைக்கு, முதலில் பிரதமர் மோடி போடும் சட்டையின் விலை குறித்து பட்டியல் வெளியிட வேண்டும். உலகிலேயே யாரும் இவ்வளவு விலை உயர்ந்த உடை அணிந்தது கிடையாது. ராகுல் காந்தியின் டீ-சர்ட் விலை எனக்கு தெரியாது. நான் ஒன்றும் ஜவுளிக்கடை வைத்திருக்கவில்லை. இதை சர்ச்சையாக்க தேவை இல்லை. ராகுல் காந்தியின் அரசியல் ரீதியாக கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இப்படிப்பட்ட மலிவான அரசியல் மூலம் அந்தப் பிரச்சார பயணத்தை பாஜக இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications