பொங்கி வரும் காவிரி..கரையோர கிராமங்களில் சூழ்ந்த வெள்ளம்..மூழ்கிய பாலங்கள்..அம்மா மண்டபம் மூடல்
திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் யாரும் குளிக்க இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆறு ஓடும் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு! நாளை முதல் 5 மாதம் மூடப்படும் என அறிவிப்பு! போக்குவரத்தில் மாற்றம்
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு காவிரி கரை பகுதிகளில் வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகிறார்கள்.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரங்களில் வசிப்பவர்களின் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.
பவானி கூடுதுறை
இதே போல் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது. மேலும் கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் பரிகாரம் செய்யும் மண்டபத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
திருச்சி காவிரியில் வெள்ளம்
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் நேற்று மாலை நிலவரப்படி 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் காவிரியில் 25ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் 90,405 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருச்சி உத்தமர்சீலி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஸ்ரீரக்ம் அம்மா மண்டபம் மூடப்பட்டுள்ளதால் தர்ப்பணம் அளிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வைகை ஆற்றில் வெள்ளம்
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக எட்டியதை தொடர்ந்து தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.