பெரியார்.. நிமிர்ந்த டெல்லி! இந்துத்வாவா? ‘அவரே’ தெறிக்க விட்றாரே! ஆ ராசா யாரை சொல்றாரு தெரியுமா?
திருச்சி : இன்று ஒரே தலைவராக சங்பரிவாரையும் இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் எனவும், இந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை.. தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியதுதான் என திமுக எம்பி ஆ ராசா கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி புத்துாரில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி திமுகவின் சார்பில் இந்தி எதிர்ப்பு கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆ.ராசா
நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஹிந்தி மூலம் இந்துத்துவாவை கொண்டு வருகிறார்கள். ஹிந்துத்துவா தமிழரின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை என்பது துவங்கும் போது இதில் இந்து என்கிற வார்த்தை பயன்படுத்தக்கூடாது என்று அரசிற்கு கடிதம் எழுதியவர் அன்றைய கா.சு.பிள்ளை. அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் எங்கள் மொழி அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் மொழி ஆனால் சமஸ்கிருதத்தை கொண்டு வந்து இந்துத்துவா பண்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று பாஜக கொண்டு வருகிறது.

மொழி நம்மை சேர்க்கும்
ஜாதியும், மதமும் வேண்டுமென்றால் நம்மை பிரிக்கும் ஆனால் மொழி மட்டும் தான் நம்மை சேர்க்கும்.
இனத்தாலும் மொழியாலும் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒற்றை குடைக்குள் தமிழ் என்ற மொழிக்குள் ஒன்று இணைத்தவர் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதிய அன்றைய பிரதமர் நேரு சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று கடிதம் எழுதி இருக்கிறார் என்று அன்று அண்ணா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மு.க.ஸ்டாலின்
அன்று பெரியாருக்கும் அண்ணாவிற்கும் கலைஞருக்கும் எதிராக வந்த ஆரியமும் சமஸ்கிருதமும் இன்று பல மடங்கு உயர்ந்து தமிழக முதலமைச்சருக்கு வந்துள்ளது. ஆனால் அவர்கள் மூன்று பேரினுடைய இணைந்த சக்தியாக இன்று ஒரே தலைவராக சங்பரிவாரையும் இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின். ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்தது ஏன் வைத்தோம். சிவில் சட்டத்தையும், ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரின் 360 சட்டத்தை திரும்பப் பெறுவதும் ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது என்று அன்று கலைஞர் முரசொலி மாறன் மூலம் வாஜ்பாயிடம் எழுதி வாங்கிக்கொண்டு தங்களுடைய கூட்டணிகள் தொடர்ந்தனர்.

ஜெய்ஸ்ரீ ராம்
பாராளுமன்றத்தில் என்னிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார் நாங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்கிறோம், நீங்கள் இந்து தானே ஏன் ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல கூடாது ஆனால், நீங்கள் பெரியார் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டபோது உங்கள் ஒவ்வொருவருடைய பெயரிலும் உங்களுடைய ஜாதியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்க யாருடைய பெயரிலும் ஜாதி இணைக்கப்படவில்லை. இதுதான் பெரியார் என்று கூறினேன்

இந்தியை கற்றுக் கொண்டேன்
இந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. நூறு ஆண்டுகளாக இந்தி பிரச்சார சபா இருக்கிறது. தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியதுதான். என்னை 15 மாதம் சிறையில் வைத்தார்கள். அங்கு நான் இந்தியை கற்றுக் கொண்டேன். தற்போது இந்தி மறந்துவிட்டது வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்களில் சிறையில் வைத்தால் கற்றுக் கொள்ளப் போகிறேன். ஒரு ஓவியம் என்றால் பல வண்ணங்கள் கலந்தது தான். ஒரே வண்ணத்தில் ஓவியம் வரைய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் ஓவியம் என்று கூற முடியாது அதே போல் தான் இந்தி மட்டும் என்றால் இந்தியா இருக்காது என்று கலைஞர் கூறினார்" என பேசினார்.












Click it and Unblock the Notifications