கொரோனா குறித்து கேட்டால் சிரித்தார் முதல்வர்.. இப்ப அவர் ஆபீஸுக்கே வந்திருச்சே.. கேஎன். நேரு கிண்டல்
தொற்றை தடுக்க முதல்வர் தவறிவிட்டதாக கேஎன் நேரு குற்றஞ்சாட்டி உள்ளார்
திருச்சி: "விஜயபாஸ்கர் இருக்காரே, அவர் இல்லாததைகூட, உண்மை மாதிரியே பேசக்கூடியவர்.. அப்படி பேச அவரை விட்டால் இங்கு வேறு யாருமே கிடையாது.. வயசானவங்களைதான் கொரோனா தாக்கும் என்று அன்னைக்கு முதல்வர் சிரிச்சிக்கிட்டே சொன்னாரே.. இப்போ அவர் ஆபீசுக்குள்ளேயே வந்துடுச்சே.. கொரோனா எப்போது முடியும் என்று கேட்டால் கடவுளுக்குத்தான் தெரியும் என்கிறார், அப்படின்னா, இவர் எதற்கு ஆட்சி நடத்த வேண்டும்?" என்று திமுகவின் மூத்த தலைவர் கேஎன் நேரு அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேஎன் நேரு செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.. அப்போது அவர் பேசும்போது, கொரோனா பரவலில் அதிமுக அரசின் செயல்பாடுகள், ஸ்டாலினின் அதிரடிகள் முதல், சசிகலா விடுதலை வரை விலாவரியாக பேசினார்.
கேஎன். நேரு பேசியதாவது: "திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கியதால்தான் கொரோனா பரவியதாக முதல்வர் சொல்கிறார்.. சீனாவில் கொரோனா பரவிக் கொண்டிருந்த காலத்திலேயே, தமிழ்நாட்டில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசினார்.

ஆளும்கட்சி
அப்போது பணக்காரர்களுக்கும், 70 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கும்தான் வரும் என முதலமைச்சர், சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். இப்போது அவரது ஆபீசுக்குள்ளேயே வந்துவிட்டது. ஒரு அமைச்சருக்கும், ஆளும்கட்சிக்காரர்களுக்கும்கூட வந்துவிட்டது. இதனால் கொரோனா பரவிவிட்டது எனக் கூற முடியுமா?

முக ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் என்பவர் ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுபவர்... மாறாக அவர்களின் செயலை ஆதரித்து மாலையிட்டு மரியாதையா செய்ய முடியும்? பாராட்டி மாலை அணிவிப்பது எதிர்க்கட்சியின் பணியில்லை.. முக. ஸ்டாலினை முதல்வர் குறை சொல்வது சரியானது அல்ல. திமுக ஆட்சியில் கடுகளவு தவறு நடந்தாலும் மலையளவு எழுதும் ஊடகங்கள், இந்த ஆட்சியில் மவுனமாக இருப்பது ஏன்?

ஆபரேஷன்
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படியேதான் நாங்கள் செய்து வருகிறோம்.. சில இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது... ஆனால், எம்எல்ஏவாக இருந்த ஜெ.அன்பழகன் நிவாரணப் பணியின் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டு இறக்கவில்லை... அவர் ஏற்கனவே ஆபரேஷன் செய்திருந்தார். இப்போது தமிழ்நாட்டில் சுமார் 957 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்... இதற்கு பிறகும்கூட போதிய அளவுக்கு இங்கு டெஸ்ட்கள் மேற்கொள்ளப்படுவதில்லை...

விஜயபாஸ்கர்
நோய் தடுப்புப் பணியில் அதிமுக அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.. செய்ய வேண்டிய பணிகளை காலம்தவறிச் செய்ததால்தான் மக்கள் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மை இல்லாத சம்பவத்தைக்கூட, உண்மைபோலவே பேசக்கூடியவர்... அப்படிப் பேச அவரைவிட்டால் இங்கு வேறு யாரும் கிடையாது.. கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சிக் கூட்டம் வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தொடர்ந்து முதலமைச்சர்மறுத்து வருகிறார்.

தினக்கூலிகள்
எந்தக் கட்சியாக இருந்தாலும், போதிய இடைவெளி விட்டு கூட்டங்களை நடத்த வேண்டும்... முதல்வர் செல்லக்கூடிய இடங்களிலும் தனிமனித இடைவெளியின்றி கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. ஊரடங்கு காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள கட்டிடத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வண்ணப் பூச்சாளர்கள் உள்ளிட்ட தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பட்டினியாக உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

கருணாநிதி
முதல்வர் சேலத்துக்கு மட்டும் செல்வது ஏன் என ஸ்டாலின் கேட்கவும்தான், கோவைக்கும், திருச்சிக்கும் சென்றுள்ளார்.. மேட்டூரில் 100 அடியில் தண்ணீர் உள்ள நிலையில் பாசனத்துக்குத் திறந்ததை சாதனை என்கிறார்... திமுக ஆட்சிக் காலத்தில் 43 அடி இருந்தபோதே, பாசனத்துக்காக முதல்வர் கருணாநிதி தண்ணீர் திறந்தார்... பருவநிலை கைகொடுத்தால் எதுவும் சாத்தியமே. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. குடிமராமத்துப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தனித்தனியாக மேற்கொள்ளாமல், தொகுப்பு தொகுப்பாக செய்கின்றனர்.

உபகரணங்கள்
கொரோனா எப்போது முடியும் என்று கேட்டால் கடவுளுக்குத்தான் தெரியும் என்றும், வருண பகவானின் ஆசியால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் கூறுகிறார். அப்படியானால் இவர் எதற்கு ஆட்சி நடத்த வேண்டும்? கொரோனா திட்டம் என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள உபகரணத்தைக்கூட, ரூ.12 ஆயிரத்துக்கு வாங்குகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு என முதல்வர் கூறி வரும் நிலையில், தினந்தோறும் அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்படுவது எப்படி?" என்றார் கேஎன் நேரு.

சசிகலா
இதையடுத்து, சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சிறைத்துறையிலிருந்து அதைபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை... அவர் வந்தால் அரசியலில் மாற்றங்கள் வரலாம். அடுத்த கட்சி தொடர்புடையது என்பதால், இதுகுறித்து நான் பேசக்கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications