ரூ.937 கோடியில் தடுப்புப் பணிகள் - சென்னையை வெள்ளம் பாதிக்காது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
திருச்சி: சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையை வெள்ளம் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருச்சி அம்மாமண்டபம் படித்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசியவதாவது: சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால், இதனைத் தாண்டி பணிகள் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பணிகள் விரைந்து நடைபெறுகிறது.
பூமிக்கு அடியில் குடிநீர் குழாய் புதை வடிகால் திட்ட குழாய்கள், தொலைத் தொடர்புத்துறை வயர்கள் இருப்பதால் அவற்றில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பின் பேரில் சென்னையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கவனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதுகாத்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்வதால் பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் விரைந்து பணிகள் முடிக்க உத்தரவிடப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் கண்காணிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த இடங்களில் 576 சாலைகள் போட வேண்டிய இடத்தில் 276 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளும் முடித்து விடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications