பழையபடி.. 15 மாசம் ஜெயில்ல வைங்க.. இந்தி கற்றுக்கொள்கிறேன்.. ஆ.ராசா கலாய்
திருச்சி: சிறையில் 15 மாதம் இருந்தபோது இந்தி கற்றுக்கொண்டேன். வெளியே வந்தவுடன் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது மறந்துவிட்டது என இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி ஆ ராசா பரபரப்பாக பேசினார்.
மத்திய அரசு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
சமீபத்தில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது. அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

ஆர்ப்பாட்டம்
இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்பட உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆ ராசா பேச்சு
இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியிலும் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு என்ன பிரச்சனை
இந்தி மூலம் இந்துத்துவாவை கொண்டு வருகிறார்கள். ஜாதி, மதம் ஆகியவை மக்களை பிரிக்கும். மொழி மட்டும் தான் மக்களை சேர்க்கும். இனத்தால் பிரிந்த அனைவரையும் தமிழ் தான் ஒற்றைக்குடைக்கும் கொண்டு வருகிறது. திமுக தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலினும் தொடர்கிறார். இந்தியை படிக்கிறது என்றால் படிக்கலாம். இதில் எனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. தேவைப்பட்டால் இந்தியை படித்து கொள்ள வேண்டியதுதான்.

சிறையில் இந்தி கற்றுக்கொண்டேன்
நான் 15 மாதம் சிறையில் இருந்தேன். அங்கு நான் இந்தி பேச துவங்கி விட்டேன். தண்ணீர் கொண்டு வா என்பதை இந்தியில் கூறுவேன். சிறையில் நான் இந்தியை கற்று கொண்டேன். தற்போது கற்றுக்கொள்ளவில்லை. இந்தி மறந்துவிட்டது. வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்களில் சிறையில் வைத்தால் கற்று கொள்ள போகிறேன். கருப்பு, சிவப்பு நிறத்தை பார்த்து பயப்படுகிறார்கள். 2024ல் கருப்பு சிவப்பா, காவியா என பார்த்து கொள்ளலாமா?'' என்றார்.












Click it and Unblock the Notifications