அண்ணாமலையின் தேவையில்லாத அரசியல் ஸ்டண்ட்.. தமிழ், சமஸ்கிருதத்தில் பழனி கும்பாபிஷேகம்.. சேகர்பாபு!
திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேவையில்லாமல் அரசியல் ஸ்டண்ட் செய்வதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். அதேபோல், ஆகமவிதிகளை பின்பற்றி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பக்தர்களின் உண்டியல் காணிக்கை இறைவனுக்கும் கோயில் வளர்ச்சிக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டும் மாறாக அதிகாரிகளின் மிக்சர் செலவிற்கு அல்ல.
திருச்செந்தூரில் 5,309 மாடுகள் காணாமல் போனதை அமைச்சர் சேகர்பாபு-வால் மறுக்க முடியுமா? அறநிலையத்துறையின் உள்தணிக்கையில் ஏறத்தாழ, 15 லட்சம் பில்களுக்கு, ரூ.1,302 கோடி சிக்கல் உள்ளது என்பதை அவர் மறுப்பாரா? அல்லது, அதனை இல்லை என்று அவர் தெளிவுப் படுத்துவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர்
சேகர்பாபு பேட்டி
இதுகுறித்து திருச்சியில் விமான நிலையத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திருச்செந்தூரில் கோயிலில் 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டது. அதற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அரசியல் ஸ்டண்ட்
இதுகுறித்து நேற்றே நான் விளக்கமாக பதில் அளித்து விட்டேன். தேவையில்லாமல் 'அரசியல் ஸ்டண்ட்' அடிக்கிறார் அண்ணாமலை என்று விமர்சித்தார். அதேபோல், எனக்கோ அல்லது எனது உறவினருக்கோ சென்னை துறைமுகத்தில் இடம் இருக்கிறது என்று அண்ணாமலை நிரூபிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
மலைக்கோட்டையில் லிஃப்ட்?
தொடர்ந்து, திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் என்பது, போதுமான இடமில்லாததால் சாத்தியமில்லாதாக இருக்கிறது. அதற்கு மாற்றாக லிஃப்ட் அமைக்கலாமா? என்றும், இன்னும் சில மாற்றுத் திட்டத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, உலகப் பிரசித்திப் பெற்ற பழனி திருக்கோயில் கும்பாபிஷேத்துக்காக, 47 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், சமஸ்கிருதம்
இவர்களில், 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும். அவ்வளவு தான் அங்கு இடம் இருக்கிறது. இதில், 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், ஆகமவிதிகளை பின்பற்றி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.