ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்.. திருச்சியில் கூடியது செயற்குழு கூட்டம்! கிடைக்குமா இலையும் தலைமையும்?
திருச்சி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று இருக்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் அணியின் செயற்குழு கூட்டம் திருச்சியில் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூடியது. திருச்சியில் வரும் மே 24 ஆம் தேதி முப்பெரும் விழா நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கும் தற்போது செயற்குழு கூட்டம் கூடி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி அதில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து நிரந்தர பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியுள்ளார். அதே நேரம் அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு சட்டப்போராட்டங்களை ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்கள் துணையுடன் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் தனக்கு இருக்கும் மாபெரும் ஆதரவை தமிழ் மக்கள் முன் காட்டும் வகையில் திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூட உள்ளார்கள்.

அவர்கள் அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள். அதிமுகவில் நீக்கப்பட்ட சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் யாரையும் அதிமுகவில் இருந்து நீக்கவில்லை. அனைவரும் கட்சியில் தான் உள்ளார்கள். அதிமுகவின் மூத்த முன்னோடிகள், முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அதில் அவர்கள் பங்கேற்பார்கள்." என்றார்.
இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்சிக்கு சென்றார். திருச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தனது தரப்பு செயற்குழு கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications