ராமஜெயம் கொலை.. திருச்சியில் ரவுடிகளுக்கு உடற்தகுதி பரிசோதனை..உண்மை பரிசோதனை எப்போது
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை தொடங்கியது. சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார் ஆகிய 4 ரவுடிகளுக்கு உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது. சீர்காழியில் இருந்து வந்த சத்யராஜ், சுரேஷ்க்கும் உடற்தகுதி பரிசோதனை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார்.
பத்து ஆண்டுகளைக் கடந்தும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகள் யாரென்று அடையாளம் காணப்பட முடியவில்லை. சிபிஐ, சிபிசிஐடி என பல்வேறு பிரிவினரின் விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் அமர்வில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தின் பிரபலமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்.. உண்மை கண்டறியும் டெஸ்ட்! 12 ரவுடிகள் சம்மதம்! சிக்கும் குற்றவாளி?
9 பேர் ஆஜர்
கடந்த 1ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி, 14ஆம் தேதிகளில் நடைபெற்ற இது குறித்த விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புதல் தெரிவிக்க அல்லது ஆட்சேபனையை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ரவுடிகள் மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா கடலூர், சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பெரும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 9 பேர் மட்டும் கடந்த 14ஆம் தேதி ஜே எம் 6 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
8 பேர் சம்மதம்
இவர்களில் சாமி ரவி, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கெனவே தான் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தார்.
12 பேர் சம்மதம்
இதனையடுத்து 17 தேதியன்று ஆஜராகாத ரவுடிகளை கட்டாயம் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி சிவக்குமார், வழக்கை தள்ளி வைத்தார். இன்றைய தினம் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். இன்றைய தினம் 4 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் கூறினர். இதுவரை மொத்தம் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சிக்குவாரா கொலையாளி
இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை வருகிற 21ஆம் தேதி அளிப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சம்மதம் தெரிவித்துள்ள 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அனுமதி அளித்தவுடன் டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு விரைவில் இந்த 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
உடற்தகுதி பரிசோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை தொடங்கியது. சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார் ஆகிய 4 ரவுடிகளுக்கு உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது. சீர்காழியில் இருந்து வந்த சத்யராஜ், சுரேஷ்க்கும் உடற்தகுதி பரிசோதனை நடைபெற உள்ளது.