அந்த 3 பேரை தவிர மற்ற MP-க்களுக்கு என்னாச்சு? மிக்சர் சாப்பிட்டு டீ குடிக்க ஒரு கூட்டம்!
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற தென்னக ரயில்வேயின் கோட்டம் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் 3 எம்.பி.க்களை தவிர மற்ற எம்.பி.க்கள் பெரும்பாலும் வாயே திறக்கவில்லையாம்.
ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு ஒப்புக்கு ஒன்றிரண்டு கோரிக்கையை மட்டும் முன்வைத்துவிட்டு அங்கிருந்து நடையை கட்டியாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை அரிதாக நடத்தப்படும் இது போன்ற கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளும், குறைகளும் தான் பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் கூட்டம்
ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய தமிழகத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே சார்பில், கோட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் திருநாவுக்கரசர், எம்.எம்.அப்துல்லா, கார்த்தி சிதம்பரம், செல்வராஜ், திருமாவளவன், பாரிவேந்தர், நவாஸ்கனி என 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
என்ன பேச்சு
இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மட்டுமே அதிகமான கோரிக்கைகளையும், தென்னக ரயில்வேயில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு மாநிலங்களவை உறுப்பினராக புதுக்கோட்டை அப்துல்லாவும் தனது ஊர் சார்ந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
கிசுகிசுப்பு
அப்துல்லா பேசுவதை உன்னிப்பாக கவனித்த திருநாவுக்கரசர் மேற்கொண்டு பேசுவதை தவிர்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் பாரிவேந்தர், செல்வராஜ், நவாஸ்கனி உட்பட இன்னும் சிலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாயே திறக்கவில்லை எனத் கூறப்படுகிறது. இதனால் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு கலைந்து செல்ல இப்படி ஒரு கூட்டம் தேவையா என அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் சிலரே கிசுகிசுத்ததையும் அறிய முடிகிறது.
முக்கிய கோரிக்கை
இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் முன் வைத்த முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று, தென்னக ரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நாளிதழ்களில் மட்டும் பிரசுரம் செய்தால் அது அனைத்து தரப்பினரையும் சென்றடைந்து சேர வாய்ப்பில்லை என்றும் சமூக வலைதளங்களில் தென்னக ரயில்வேயின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.