திருச்சியில் அரை கிலோ மீட்டருக்குள் 2 முறை சுங்கச்சாவடி.. பர்ஸில் பணத்தை எடுத்து வையுங்க மக்களே
திருச்சி: திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டையில் ஏற்கனவே சுங்கச்சாவடி இருக்கும் நிலையில், புதிதாக துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலைக்கும் துவாக்குடியில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக அரை கிலோ கிமீ தூரத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி- புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி- திண்டுக்கல், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை 44 கி.மீ தொலைவுக்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், சாலை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக துவாக்குடி- மாத்தூர் இடையிலான 12.70 கி.மீ தொலைவுக்கான பணிகள் முடிவுற்று கடந்தாண்டு 2022ம் ஆண்டு முதல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாத்தூர்- பஞ்சப்பூர் இடையிலான 13.21 கி.மீ தொலைவுக்கான பணிகள் முடிந்த நிலையில் சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடி உள்ள நிலையில் அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் திருச்சி தஞ்சை உள்பட டெல்டா பகுதி மக்கள் வெறும் அரை கிலோமீட்டருக்கு இரண்டு முறை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு திருச்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக, இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி அருகருகே 2 சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 2021-ம் ஆண்டு அன்று முன்னாள் எம்.பி. குமார் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி பணிகள் முடிவுற்று தற்போது சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசையும் கண்டித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில், 23-ந்தேதி மாலை 5 மணிக்கு, துவாக்குடி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெறும். இதில், அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications