ஆன்- லைன் மூலம் அதிரடி காட்டும் திருச்சி... தூய்மை நகர பட்டியலில் 4 வது இடம்
திருச்சி: தூய்மை நகரங்கள் தொடர்பாக மத்திய அரசு பொதுமக்களிடையே நடத்தி வரும் ஆன்-லைன் வழியான கருத்துக் கேட்பில் திருச்சி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்களை பட்டியலிட்டு அறிவித்து வருகிறது.
2019ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4,237 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்து வருகிறது. இதில், 1.40 கோடி மக்கள் பங்கேற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் பெறுவதில் சரிவு
மொத்தம் 5 ஆயிரம் மதிப்பெண்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் பெறும் உள்ளாட்சிகளை வரிசைப்படுத்தி தூய்மை நகரங்களுக்கான பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டில் 14.25 புள்ளிகள் பெற்று திருச்சி மாநகரம் 2ஆவது இடம் பிடித்தது. பின்னர், 2016 இல் 3ஆவது இடமும், 2017இல் 6 ஆவது இடத்துக்கும் சென்றது. 2018இல் மேலும் பின்தங்கி 13ஆவது இடத்துக்கு சென்றது. மக்களின் கருத்து கேட்புக்கான மதிப்பெண்கள் பெறுவதில் சரிவு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது.
திருச்சி மாநகராட்சி முந்துகிறது
இதையடுத்து ஆன்-லைன் மூலம் மாநகராட்சி நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாது முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் அனைத்து தளங்களையும் பயன்படுத்த ஊக்குவிப்பு பணிகளில் இறங்கியது. இதன்பயனாக தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி முந்தி வருகிறது.
ஆன்-லைன் மூலம் கருத்து
ஜன.17ஆம் தேதி இரவு 7 மணி வரையிலான புள்ளி விவரங்களின்படி ஹைதராபாத் முதலிடத்திலும், நொய்டா இரண்டாம் இடத்திலும், தெற்குதில்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது. திருச்சி மாநகராட்சி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேர் ஆன்-லைன் மூலம் திருச்சி மாநகராட்சி நடவடிக்கைகளின் தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சிக்கு வாய்ப்பு
முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் மட்டுமே சராசரியாக 40 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. 2, 3 ஆகிய இடங்களை பிடித்த நகரங்களும் திருச்சி மாநகராட்சியைவிட சொற்ப அளவு (ஆயிரம் பேர் கூடுதலாக) வித்தியாசத்திலேயே உள்ளன. எனவே, இந்த நகரங்களை பின்னுக்குத் தள்ளி திருச்சி முன்னேறும் வாய்ப்பும் உள்ளது.
மக்களிடம் ஆர்வம்
இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சியின் தனி அலுவலரும், ஆணையருமான ந. ரவிச்சந்திரன் கூறியதாவது: திருச்சி மாநகரை தூய்மையாக வைத்திருப்பதில் மாநகராட்சியைவிட மக்களிடம் அதிகம் ஆர்வம் எழுந்துள்ளது. குப்பைகள் தரம்பிரித்து வழங்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. மாநகராட்சியின் செயலி, மத்திய அரசின் தூய்மை நகர கணக்கெடுப்பு செயலி ஆகியவற்றை பயன்படுத்தி மாநகர மக்கள் நாள்தோறும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆன்-லைன் கருத்து கேட்புக்கு 850 மதிப்பெண் உள்ளது.
முன்னிலையான மாநகராட்சி
தற்போதைய நிலையில் திருச்சி 4ஆவது இடத்தில் உள்ளது. இது மேலும் அதிகரிக்கும். அனைத்து நிலைகளிலும் மாநகராட்சியின் செயல்பாட்டை தீவிரப்படுத்தி 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலில் திருச்சி மாநகராட்சியை முன்னிலை பெறச் செய்வது உறுதி என்றார் அவர்.