தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி..போலீசாருக்கு காக்கிக்கு பதில் காவி சீருடை.. திருச்சியில் மிரட்டிய எச்.ராஜா
திருச்சி: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் போது போலீசாருக்கு காக்கிக்கு பதில் காவி சீருடையாக மாற்றுவோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
சனாதன ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருப்போம் என அறிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முதலில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜகவினரும் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பது பாஜகவினர் அறிவிப்பு. இந்தப் போராட்டத்துக்கு மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தலைமை வகித்தார்.
எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருவானைக்காவல் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியதாவது: சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். அப்போது தமிழ்நாடு போலீசாரின் காக்கி சீருடை மாற்றப்படும். அவர்களுக்கு காக்கிக்கு பதிலாக காவி சீருடை கொடுப்போம்.
சனாதனம் என்பது ஏற்றத்தாழ்வை சொல்லவில்லை. சுபவீ, திருமாவளவன் போன்றோருக்குப் பின்னர்தான் ஆணவ கொலைகளே நடக்கின்றன. சனாதனத்தை ஒழிப்போம் என்பவர்கள் இனப்படுகொலை செய்வோம் என்கின்றனர். இந்த நிலைமையை மாற்றும் வரை பாஜக ஓய்ந்து போகாது. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications