அடேங்கப்பா.. தூத்துக்குடியில் சிக்கிய 10 டன் போதைப் பொருள்! எங்கிருந்து வந்தது தெரியுமா?
தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்கு பெட்டகம் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை, மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வாயிலாக, போதைப் பொருட்கள் அவ்வப்போது கடத்தல் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், அதனை அதிகாரிகள் குறிவைத்து பிடிப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் உள்ளிட்ட ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல் ஒன்றில், ஒயிட் சிமெண்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களுடன், தடை செய்யப்பட்ட பாப்பி சீட் என்னும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் இருந்து ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த கண்டெய்னரில் ஒயிட் சிமெண்ட் இருந்தது. அதற்கு
பின்புறம் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பாப்பி சீட் எனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அந்த கண்டெய்னரில் இருந்த சுமார் 10 டன் எடையிலான பாப்பி சீட் எனப்படும் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருளின் மதிப்பு ரூ.1.75 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் எந்த முகவரிக்கு கொண்டு வரப்பட்டது என் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை ஏறிப் போச்சு! போதைப் பொருள் டான்களுடன் கனெக்சன்! போலீசிடம் தொக்காய் சிக்கிய பிரபல நடிகை! ஷாக்!