கயத்தாறு அருகே பயங்கரம்.. பேருந்து டயர் வெடித்து மூவர் பலி.. 15க்கும் மேற்பட்டோர் காயம்..!
தூத்துக்குடி: கயத்தாறு அருகே தனியார் ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பேருந்தை ராஜபாளையம் அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டிச்சென்றார். பேருந்தில் 28 பேர் பயணம் செய்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணியளவில் பேருந்து நான்குவழிச்சாலையில் பயணித்தது.

டயர் வெடிப்பு
அங்கு அரசன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரனெ பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியதால், காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். இந்தத் தகவலறிந்த கயத்தாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் 2 பேர் பலி
விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தீயணைப்புத்துறையினருக்கு தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள புத்தன்கடையை சேர்ந்த ஜீசஸ் ராஜன் (47), நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளையை சேர்ந்த சிவராமன்(28) ஆகிய 2 பேரும் பேருந்துக்கு உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓட்டுநர் உயிரிழப்பு
இதேபோல் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் பாண்டி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே பேருந்து விபத்தில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் என 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை, கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பயணிகள்
இந்த விபத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய காயமடைந்த சென்னையைச் சேர்ந்த குமார்(36), விநாயக்(30), செங்கல்பட்டை சேர்ந்த யுகந்தி(30), திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த விக்டர்(51), மாணிக்கநகரை சேர்ந்த சூரியபிரகாஷ்(25), மாதாங்கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்(32) ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications